Friday, December 12, 2008

இளநாணம்

சில்லாக்கு விளையாடிச்
சிரித்திருந்த பருவத்தில்
பொல்லாத நினைவலைகள்
புகுந்ததில்லை மனக்கடலில்!
எல்லோரும் கைகோர்த்தே
எல்லையற்ற மகிழ்ச்சியிலே
பல்லாண்டு களித்திருந்தோம்!
பரபரப்பை உணர்ந்ததில்லை!

நானிருந்த நிலையொன்று!
நானிருக்கும் நிலையொன்று!
ஏனிந்தப் பருவத்தை
இங்கேநான் அடைந்தேனோ?
தேனிருக்கும் மலராகத்
தேகத்தில் பலமாற்றந்
தானிருக்கும் பருவத்தில்
தனிமைக்குத் துணையானேன்!

என்னுடனே விளையாடி
இருந்திட்ட ஒருசிறுவன்
என்னைப்போல் வளர்ந்தேதான்
இளைஞனாக நின்றிருந்தான்!
என்னுணர்வில் ஏற்பட்ட
எத்தனயோ உருமாற்றம்
இன்னதென்று புரியவில்லை!
இதுதானோ இளநாணம்!

-- மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home