Friday, April 10, 2009

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற எண்ணிக்
களமமைத்துப் போராட இங்கே -- உளமாற
எந்த அரசியல் கட்சிகளும் இல்லையே!
தன்னலத்தின் வேரானார்! சாற்று.

தொப்புள் கொடியுறவு தத்தளிக்கும் கோலத்தில்!
இப்பொழுது சாவோமா? அப்பொழுது சாவோமா?
எப்பொழுது எப்படிச் சாவோமோ? என்றேதான்
எப்படியோ வாழ்கின்றார் அங்கு.

பாதுகாப்பு என்னும் வளையமே போர்க்களமோ?
வேதனைச் சாவு நெருக்குகின்ற சாக்காடோ?
பாதகர்கள் வல்லூறாய்ச் சுற்றுகின்றார் தாகமுடன்!
ஊடகத்தில் பார்க்கின்றோம்! நொந்து.

நாடுதோறும் மக்கள் கொதித்தெழுந்து பொங்குகின்றார்!
நாடுதோறும் ஆட்சிகள் கண்டித்தும் பார்க்கின்றார்!
ஏடுகளும் ஊடகமும் நாளும் குமுறுகின்றார்!
தூதுவிட்டும் பயனில்லை! ஏன்?

இலங்கைத் தமிழினத்தை வேரறுக்கும் போக்கு
கலங்கவைத்து நம்மைத் தேம்பி -- அழவைக்கும்
கோலத்தைத் தந்ததே ! இந்திய வல்லரசே!
காலத்தைத் தாழ்த்தாதே இங்கு.

இருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும்!
இரண்டு அரசுகளும் போர்க்கால வேகம்
சுழல நடவடிக்கை தன்னை முடுக்கிக்
கரங்கொடுத்துக் காக்கவேண்டும் இன்று.

மதுரை பாபாராஜ்
10.04.2009

0 Comments:

Post a Comment

<< Home