Thursday, August 19, 2010

துறவிபோல் வாழ்க!

=========================
அவமானந் தன்னை வெகுமான மாக்கி
தவமுனிவன் போல துறவுநிலை ஏற்றால்
உலகமே தூற்றி உருக்குலைத்த போதும்
கலங்காமல் வாழலாம் ! நீ.

சுடுசொற்கள் தம்மை அடுசரமாய் விட்டே
நடுநடுங்க வைத்து நகைத்திடும் நேரம்
நெடுமலைபோல் நின்று உதிர்ந்துவிழச் செய்தால்
நடுங்குவார் தாக்கியோர் தான்.

பகைத்துளிகள் இங்கே அனல்துளிக ளாக
வகைவகை யாக வதைத்திட்ட போதும்
முகில்மழை போல பொழிந்திடு அன்பை!
முறிந்திடும் அந்தப் பகை.

துறவிபோல் வாழப் பழகினால் போதும்
சிறகடித்து ஓடும் மனஇறுக்கம் எல்லாம்!
எதுவுமே இங்கே உனக்கில்லை என்றே
உதறுகின்ற பக்குவத்தை நாடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home