Tuesday, August 24, 2010

சாதிக் கணக்கெடுப்பை நிறுத்து!

======================================
கட்சி அரசியலைக் கண்மூடிப் பின்பற்றி
தட்டுத் தடுமாறி வாழ்கின்றோம் -- நாட்டிலே
தன்னலக் கோலம் பதவி வெறியாட்டம்
உண்டாக்கும் பேரவலம் பார்.

நாடு முழுவதிலும் சாதிக் கணக்கெடுப்பை
தேடுபொருள் ஆக்கி எடுக்கின்றார் -- ஏடுகள்
கொள்ளுமா சாதிகளின் எண்ணிக்கை?இம்முயற்சி
தொல்லைக்கே வித்தூன்றும் சொல்.

மூடுவிழா காணுமிங்கே கட்சி அரசியல்தான்!
சூடும் மணிமகுடம் சாதி அரசியல்தான்!
ஆடும் படமெடுத்தே சாதிவெறிப் பாம்பிங்கே!
ஆடல் ரசிக்குமா?சொல்.

எந்தத் தொகுதியில் எந்தெந்த சாதிகள்
அங்கே பெரும்பான்மை உள்ளதோ - அந்தந்தச்
சாதியிலே வேட்பாளர் வாய்ப்பைத் தருவதற்குத்
தூதுவிட்டுத் தேர்ந்தெடுப்பார் கூறு.

வன்முறையும் வேற்றுமைக் கொந்தளிப்பும் அன்றாடம்
நம்கண்முன் காட்சிப் பொருளாய் அரங்கேறும்!
அம்மட்டோ? என்னென்ன கூத்தும் குழப்பமும்
நம்மை நெருக்குமோ? அஞ்சு.

நாட்டிலே கட்சிவைத்துக் கூட்டணி கண்டவர்கள்
வாக்குவாங்க சாதிவைத்துக் கூட்டணியைக் காண்கின்ற
போக்குவரும்! சாதிவெறி கொண்டாட்டம் போட்டுநிற்கும்!
ஏக்கத்தில் திண்டாடும் நாடு.

சாதிக் கணக்கெடுப்பால் நாடு தலைகுனியும்!
நீதி,சமத்துவம் எல்லாம் மறைந்துவிடும்!
ஊதி உலைவைப்பார் வேற்றுமையில் ஒற்றுமைக்கே!
சாதிக் கணக்கை நிறுத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home