Sunday, December 11, 2011

கண்ணீரே வடிகட்டி!
========================
உளைச்சலின் தாக்கத்தால் கண்ணீரோ பொங்கிக்
கரைபுரண்டே ஓடும்! வடிகட்டி யாகும்!
உளைச்சலும் நன்கு வடிந்துவிடும் அம்மா!
களைநீக்கும் நிம்மதி தான்.

சோர்வின் பிடியில்!
==================================
மனச்சோர்வா? இல்லை உடற்சோர்வா? என்றே
இனம்பிரித்துப் பார்க்க முடியாத நேரம்
மனமும் உடலும் இணைந்தேதான் சோர்வில்
தினமும் துடிக்கும் களைத்து.

மலைப்பு!
=======================================
மலையுயரம் பார்த்தும் மலைக்காமல் நிற்கும்
மலையேறும் வீரன் விலைவாசி என்னும்
மலையுயரந் தன்னைக் கணிப்பதற்கும் அஞ்சி
மலைத்திருப்பான் நாடே! சலித்து.

இத்தகைய முதுமை வரமே!
==========================
உடையும், உணவும், இருக்க இடமும்
கிடைத்தால் முதுமைப் பருவம் வரந்தான்!
கடைக்கண்ணால் பார்த்துப் பராமரிக்கும் சுற்றம்
கிடைத்தால் கொடுத்துவைத்தோர் தான்.

இத்தகைய முதுமை சாபமே
=============================
சற்றே ஒதுங்க நிழல்நாடி ஏக்கமுடன்
நிற்கும் முதுமைப் பருவத்தில் சுற்றமோ
முற்றும் ஒதுங்கிநின்றால் வாழ்க்கையே சாபமாகும்!
குற்றமென்ன செய்தார்? விளம்பு.

1 Comments:

Blogger SelvamJilla said...

you lines are simply super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/

2:41 AM

 

Post a Comment

<< Home