Wednesday, December 07, 2011

சூழ்நிலையின் கொத்தடிமை!
================================
உனக்குநான் என்றும் எனக்குநீ என்றும்
மனக்கணக்குப் போட்டு மகிழ்ந்திட வைத்துத்
தினமும் ரசித்திருப்பார்! காலச் சுழற்சி
மனதைப் பிரித்துவிடும் செப்பு.

வாழ்க்கைக் கடலில் அலைக்கழிக்க வைத்தேதான்
சூழ்நிலை எங்கெங்கோ ஊன்றவைத்துப் பார்த்திருக்கும்!
வேர்கொண்ட சுற்றங்கள் வேரிழந்து சென்றுவிடும்!
பாரில் இயல்பே இது.

வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு சூழ்நிலைகள்
கவ்வுகின்ற வாழ்வில் இறந்தவரைப் பார்ப்பதற்கும்
அம்மா! கடைசி மரியாதை செய்வதற்கும்
இங்கே முடியவில்லை யே.

ஊரறிய காகம் இறந்துவிடும்! காக்கையினம்
பார்த்தேதான் கூடிநிற்கும்! ஆனால் மனிதஇன
வாழ்க்கையில் அத்தகைய வாய்ப்பும் நழுவுதம்மா!
சூழ்நிலையின் கொத்தடிமை நாம்.

0 Comments:

Post a Comment

<< Home