Thursday, December 01, 2011

குழந்தைகளைப் பார்த்தால் பாவமாய் இல்லை?

===========================================
துள்ளி விளையடும் பள்ளிப் பருவத்தில்
அள்ளிச் சுமக்கின்றார் புத்தக மூட்டையை!
தள்ளாடிச் சாய்ந்தே நடக்கின்ற கோலமோ
சொல்லொண்ணாத் துன்பந்தான் சொல்.

அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கிறது! பள்ளி
நிர்வாகம் வேடிக்கைப் பார்க்கிறது! பெற்றோர்
உள்ளம் பொருமினாலும் வேடிக்கைப் பார்க்கின்றார்!
சொல்லித் திருத்துவார் யார்?

நடுநிலை நாளேடு கண்டித்தும், இங்கே
நடுநிலை யாளர் எடுத்துரைத்த போதும்
கொடுமை தொடர முதுகெலும்புச் சிக்கல்
அடுத்துவரும் என்செய்வோம் நாம்?

இதற்கொரு தீர்வுகாண எல்லோரும் சேர்ந்து
உடனே வழிமுறை காணவேண்டும்! இந்தக்
கடமையைச் செய்வோம்! குழந்தைகளைக் காப்போம்!
அகங்குளிர்வார்! வாழ்த்துவார்! பார்.


மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger paramasivam thamizh said...

தாள் இல்லா கல்வியே இதற்கான நான் கண்ட தீர்வு..

10:33 PM

 

Post a Comment

<< Home