Wednesday, November 18, 2015

வானமே கருணைகாட்டு!
---------------------------------------------------
வானம் உடைப்பெடுத்தே ஊற்றும் மழையேஉன்
கானத்தின் பண்ணோ முகாரியாய் இல்லாமல்
தேனினிமைப் பூபாள மாக்கித்தான் வாழ்வியங்கத்
தானே துணைபுரிவாய் நீ.

கொட்டி முழக்கி முடக்குகின்ற வான்மழையே
கொட்டியது போதுமே!அன்றாட வாழ்க்கை
எப்பொழுதும் போல இயங்கத் துணைபுரிந்தால்
நற்றமிழால் நன்றிசொல்வோம் இங்கு.

மழையேஉன் ஆட்டத்தை இங்கே நிறுத்து!
கரைபுரண்ட வெள்ளமாய் வந்தேனோ மக்கள்
நிலைகுலைந்து வாழும் நிலைதந்தாய்? வானே!
இரக்கமுடன் காப்பாற்று நீ.

நிறுத்து நிறுத்து மழையை நிறுத்து!
கறுத்த வானமே வெளுப்பாக மாறு!
கடுமழை போதும் கருணையைக் காட்டு!
படுத்தியது போதும் நிறுத்து

16.11.2015

0 Comments:

Post a Comment

<< Home