Thursday, November 14, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்!
---------------------------------------------------------
அருள் உடைமை-- 25
----------------------------------------------------------
அனைவரிடமும் இரக்கம் காட்டு
--------------------------------------------------------------------
இழிந்தவ ரிடத்திலும் செல்வமுண்டு!
அருட்செல்வம் ஒன்றே சிறந்ததாகும்!

அருளுடன் வாழ்தல் நெறியாகும்!
அதுவே அருமைத் துணையாகும்!

அருள்மனங் கொண்டே வாழ்பவர்க்கு
இருள்சூழ் வாழ்க்கைத் துன்பமில்லை!

உயிரினந் தன்னைக் கருணையுடன்
காத்தே வாழும் சான்றோர்கள்

தன்னுயிர் எண்ணி அஞ்சுகின்ற
கோழை நிலைதான் இங்கில்லை!

இருளைப் பரப்பி அருள்மறந்தோர்
அறத்தை மறந்தே வாழ்விழந்தோர்!

பொருளோ இன்றி இவ்வுலக
வாழ்க்கை இங்கே இல்லைதான்!

அருளோ இன்றி அவ்வுலக
வாழ்கை அங்கே இல்லைதான்!

பொருளை இழந்தால் மீண்டுமிங்கே
பொருளைப் பெற்றே வாழ்ந்திடலாம்!
அருளை இழந்தால் இழந்ததுதான்!

புத்தகம் சொல்லும் மெய்ப்பொருளை
அறிவில் லாதோர் காண்பதுபோல்
அருளில் லாதோன் அறச்செயலாம்!

எளியவர் களையோ துன்புறுத்தும்
எண்ணம் சிறிதும் வேண்டாமே!

வலியவர் உன்னைத் துன்புறுத்தும்
கோலம் வருமே துள்ளாதே!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home