Tuesday, November 19, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-----------------------------------------------------
துறவு--35 
--------------------------------------------------------------------
பேராசையை விட்டொழிந்தால் பெருநன்மை உண்டாகும்
--------------------------------------------------------------------
ஆசை கொண்ட பொருள்மீது
ஆசையை விட்டால் அப்பொருளால்
என்றும் இங்கே துன்பமில்லை!

பொருள்கள் மீது வைத்துள்ள
ஆசையை நீக்கினால் இன்பந்தான்!

ஆசையைத் தூண்டும் ஐம்புலனை
அடக்கி வாழக் கற்றுக்கொள்!

பற்றற்ற வாழ்வே தவவாழ்வாம்!
பற்று படர்ந்தால் மயங்கிடுவோம்!

பிறப்பை வெறுக்கும் மாந்தருக்கு
மேனிச் சுமையே அதிகந்தான்!
ஆசைச் சுமைகள் வேறேனோ?

செருக்கை ஒழிக்கும் நிலையெடுத்தால்
 உயர்ந்தோர் காணா உநர்நிலையை
காண்பார் அந்தச் சான்றோர்கள்!

காற்றுடன் செல்லும் சருகைப்போல்
ஆசையின் பின்னால் நாம்சென்றால்
துன்பம் நம்மைத் தழுவிடுமே!

ஆசையை விட்டவர் ஞானியாவார்!
மற்றவர் பிறவி வலைக்குள்ளே
சிக்கித் தவிக்கும் மனிதர்தான்!

ஆசையை விட்டால் இப்பிறவித்
துயரம் நீங்க வழியுண்டு!

இல்லை என்றால் அத்துயரம்
என்றும் தொடரும் தொடர்கதைதான்!

ஆசை யற்ற சான்றோர்மேல்
ஆசை கொள்வ தென்பதுவோ
நமது ஆசையை விடுவதற்கே!
துறவற நிலையை அடைவதற்கே!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home