Friday, January 22, 2021

100 பண்புடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

100 பண்புடைமை

குறள் 991:

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


தன்னுடன் யாரும்  பழகிப் பேசுதல்

இங்கே எளிமையெனில் அத்தகைய 

நல்வழியே

பண்புடைமை யாகும் உணர்.

குறள் 992:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


அன்பாய்ப் பழகுதல், நற்குடி வாழ்க்கை,

பண்புடைமை என்பதற்குச் சான்று.

குறள் 993:

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.


உறுப்புகளால் ஒத்திருத்தல் மாந்தரல்ல! பண்பால்

ஒருமித்தல் மாந்தராம் சொல்.

குறள் 994:

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புள ராட்டும் உலகு.


நேர்மை அறங்களைப் போற்றிப்  பயன்படுவார்

பண்பைப் புகழும் உலகு.

குறள் 995:

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.


விளையாட்டாய்க் கூட இகழாதோர் மாற்றார்

உளம்நோகப் பேசமாட்டார் கூறு.

குறள் 996:

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


பண்புடையார் உள்ளதால் இவ்வுலகம் உள்ளது!

இன்றேல் புதைந்திடும் கீழ்.

குறள் 997:

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்.


அரம்போல கூர்மை அறிவிருந்தும் பண்பை

இழந்தோர் மரத்திற்கே ஒப்பு.

குறள் 998:

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.


நட்பின்றி தீமையே செய்வோ ரிடத்திலும்

பண்பின்றி வாழ்தல் இழுக்கு.

குறள் 999:

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்.


நட்பாய்ப் பழகத் தெரியாமல் வாழ்பவர்க்குப்

பட்டப் பகலிலும் இவ்வுலகம் காரிருள்போல்

முற்றும் தெரியும் உணர்.

குறள் 1000:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.


பண்பிலார் செல்வமோ பாத்திரம் கெட்டதால்

வெண்பால் திரிந்ததுபோ லாம்.

























0 Comments:

Post a Comment

<< Home