Wednesday, January 20, 2021

94 சூது

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

94 சூது

குறள் 931:

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.


வெற்றியே தந்தாலும் சூதை விரும்பாதே!

தொண்டையில் தூண்டில் இரைவிரும்பி முள்சிக்கித்

தத்தளிக்கும் மீன்நிலைதான் சாற்று.

குறள் 932:

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.


ஒருவெற்றி வந்த கவர்ச்சியில் நூறை

இழப்பவர்கள் வாழ்வாரோ கூறு?

குறள் 933:

உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.


காயுருட்டிச் சூதாடிச்  சேர்த்த பொருளெல்லாம்

தேய்ந்தே மறைந்துவிடும் செப்பு.

குறள் 934:

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன் றில்.


துன்பத்தைத் தந்து புகழையும் சீரழித்து

வன்கொடுமை பந்தாடும் ஏழ்மையைச் சூதைப்போல்

தந்திட வேறில்லை சாற்று.

குறள் 935:

கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.


சூதாட்டக் கூடத்தை, காயைப் பொய்த்திறனை

நாடியவர் என்ன இருந்தாலும் இல்லாமல்

ஆகிடுவார் வாழ்க்கையில் இங்கு.

குறள் 936:

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

முகடியான் மூடப்பட் டார்.


சூது வலையிலே சிக்கியோர் உண்ணாமல்

வேதனையில் வாடுவார் சாற்று.

குறள் 937:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்.


சூதாடும் கூடத்தில் காலம் கழிப்பவரின்

சேர்த்துவைத்த செல்வமும் நற்பண்பும் என்றென்றும்

பாழாகும் நாசமாகும் சாற்று.

குறள் 938:

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்

தல்லல் உழப்பிக்கும் சூது.


பொய்சொல்ல வைக்கும் அருள்மனத்தை மாற்றிவிடும்

துன்பத்தில் தள்ளிவிடும் சூது.

குறள் 939:

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்

அடையாவாம் ஆயங் கொளின்.


புகழ்வாழ்க்கை, கல்வியுடன் செல்வம் உணவை

உடையை  இழக்கவைக்கும் சூது.

குறள் 940:

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற் றுயிர்.


பொருளை இழக்கவரும் சூதாட்ட ஆசையும்

பெருந்துன்பம் வந்தால் உயிராசை

கொள்தல்

இரண்டுமே ஒன்றுதான் பார்.



























0 Comments:

Post a Comment

<< Home