Wednesday, January 20, 2021

95 மருந்து

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

95 மருந்து

குறள் 941:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.


பித்தம், சிலேத்துமம், வாதம் எனமூன்றும்

கற்றவர் கூறும் அளவில் குறைந்தாலோ

சற்று மிகுந்தாலோ நோய்.

குறள் 942:

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

தற்றது போற்றி உணின்.


உண்டது நன்கு செரித்தபின்  உண்ணவேண்டும்!

உண்டால் தவிர்ப்போம் மருந்து.

குறள் 943:

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.


உணவு செரித்தபின் உண்ணும் அளவை

அறிந்துண்டால்  நீடிக்கும் வாழ்வு.

குறள் 944:

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.


உண்டது செரித்தபின் ஏற்கும் உணவையே

உண்ணவேண்டும் நன்கு பசித்து.

குறள் 945:

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு.


உடலேற்கும் என்றாலும் எல்லைக்குள் உண்டால்

உடலுக்குத் தொல்லையில்லை சாற்று.

குறள் 946:

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.


அளவறிந்தே உண்போர் நலமுடன் வாழ்வார்!

அளவின்றி என்றாலே நோய்.

குறள் 947:

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.


பசியள(வு) அறியாமல் ஏகமாய் உண்டால் 

அதிகமாய் நோய்கள் வரும்.

குறள் 948:

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.


நோயென்ன? காரணங்கள் என்னென்ன? தீர்வென்ன?

ஆய்ந்தே சிகிச்சைதந்தால்  நன்று.

குறள் 949:

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.


நோயாளிக் குள்ள வயதுடன், நோய்த்தன்மை,

ஆய்ந்து மருத்துவம் கற்றவர் நேரத்தைத்

தேர்ந்து சிகிச்சைதந்தால் நன்று.

குறள் 950:

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்

றப்பானாற் கூற்றே மருந்து.


மருத்துவர், நோயாளி,  உற்றதுணை மற்றும்

மருந்தென நான்கினைக் கொண்டதே 

நோயின்

மருத்துவம் பார்க்கும் முறை.




















0 Comments:

Post a Comment

<< Home