குற்றம் கடிதல் -- 44
------------------------------------------------------
குற்றம் கடிதல் -- 44
-----------------------------------------------------------
ஆணவம் கோபம் வெறியென்னும்
ஈனக் குற்றம் இல்லாதோர்
உயர்வை அனைவரும் விரும்பிடுவார்!
பிறருக் கீதல் இல்லாமை
மாட்சிமை அற்ற தன்மானம்
தீயவை கண்டே மகிழ்வதெல்லாம்
குற்றம் என்பார் சான்றோர்கள்!
பழிகளுக் கஞ்சும் பெரியோர்கள்
குற்றம் தினையள வென்றாலும்
பனையள வாகக் கருதிடுவார்!
வருமுன் காக்கத் தவறிவிட்டால்
நெருப்பின் முன்னே வைக்கோல்போல்
வாழ்க்கை எரிந்தே அழிந்துவிடும்!
தனது குற்றம் நீக்கிவிட்டு
பிறரின் குற்றம் உரைப்பவர்கள்
வாழ்வில் குற்றம் நேராது!
நற்பணி தன்னைப் புறக்கணித்து
சேர்க்கும் செல்வம் அழிந்துவிடும்!
தன்னைப் புகழும் தற்பெருமை
தன்னலச் சூறை யாகிவிடும்!
நன்மை இல்லாச் செயல்களையே
துரும்பள வெனினும் நினைக்காதே!
தீட்டும் திட்டம் பகைவருக்குத்
தெரியா மல்தான் தீட்டவேண்டும்!
பகைவரின் சூழ்ச்சி தோல்வியுறும்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home