தெரிந்து தெளிதல்--51
திருக்குறள் குழந்தைப் பாடல்
---------------------------------------------------------
தெரிந்து தெளிதல்--51
----------------------------------------------------------
தனிமனித நல்லொழுக்கம் கொண்டவரைத் தேர்ந்தெடுத்துப்
பணிசெய்ய அமர்த்துவதே எப்பொழுதும் நன்றாகும்!
நற்குடியில் பிறந்தவரை, பழிச்செயலை வெறுப்போரை
நம்பித்தான் பொறுப்புகளை ஒப்படைத்தல் நல்லதாகும்!
அறிவார்ந்த நூல்களைக் கற்றவரே ஆனாலும்
அறியாமை இல்லாமல் இருப்பதோ அரிதாகும்!
குணங்களை ஆராய்ந்து குற்றநிலை ஆராய்ந்து
எத்தன்மை அதிகமோ அதைச்சார்ந்தோன் எனக்கருது!
பண்பகமா? இழிவகமா? என்றறிய உரைகல்லாய்
இருப்பதுவோ அவன்செய்யும் செயலன்றி வேறில்லை!
சுற்றத்தை ஒட்டித்தான் வாழாத மாந்தரையோ
நம்பவேண்டாம்! பழிபாவம் செய்வதற்கும் அஞ்சமாட்டார்!
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரையோ நம்பிவிட்டால்
பரம்பரையே துன்பத்தில் துடிக்கின்ற நிலைவருமே!
எப்படிப் பட்டவர்கள்? ஆராய்ந்து நம்பவேண்டும்!
இல்லையேல் தொல்லைகள் படையெடுத்துத் தேடிவரும்!
கண்டதும் நம்புவது! நம்பியபின் சந்தேகம்!
இரண்டுமே நீங்காத துன்பத்தின் வித்தாகும்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home