தெரிந்து செயல்வகை--47
------------------------------------------------------
தெரிந்து செயல்வகை--47
-------------------------------------------------------------
நன்மை தீமையை எடைபோட்டே
செயலைச் செய்தல் முறையாகும்!
செய்வதைத் திருந்தச் செய்பவரின்
துணையோ இங்கே இருந்துவிட்டால்
முடியாச் செயலென ஒன்றில்லை!
மலைபோல் லாபம் வருமென்றே
முதலை இழக்கும் செயல்தன்னை
அறிவுடை யோர்கள் செய்யமாட்டார்!
களங்கம் தன்னை ஏற்படுத்தும்
செயலில் எவரும் இறங்கமாட்டார்!
பகைவர் நிலையை கணிக்காமல்
செய்யும் செயல்கள் பகைவருக்கே
சாதக மாக மாறிவிடும்!
தவிர்க்கும் செயலைச் செய்வதாலும்
செய்யும் செயலைத் தவிர்ப்பதாலும்
கேடுகள் தோன்றி துன்புறுத்தும்!
சிந்தித்துச் செய்தல் அறிவுடைமை!
செய்தபின் சிந்தித்தல் அறிவின்மை!
செய்யும் முறையை அறியாமல்
செயலைச் செய்தால் எத்தனைபேர்
துணயாய் இருந்தும் வீணாகும்!
பண்பை அறிந்து நல்லதைச்செய்!
அறியாமல் செய்தால் நம்மையே
திருப்பித் தாக்கும் கணையாகும்!
தகுதிக்கு மீறிய செயல்களையோ
செய்தல் இகழ்ச்சிக் காளாக்கும்!
இகழா வண்ணம் உகந்ததையே
செய்யும் பண்பே உயர்வாகும்!

0 Comments:
Post a Comment
<< Home