வாழ்வியல் அந்தாதி 26-30
26. இறைவனை நம்பிக் கடமையைச் செய்தால்
இறையருள் கிட்டுமிங்கே! நம்பாமல் செய்தும்
இறையருள் கிட்டும்! கடமையைப் போற்றும்
இறைவன் கருணைக் கடல்.
27. கடலேழும் எல்லைக்குள் ஆடித்தான் நாளும்
அடக்கமுடன் வாழ்வதும் உண்டு!---அடங்காமை
கொண்டு சுனாமியாய் மாறி அழிக்கின்ற
தன்மையும் உண்டென்று கூறு.
28. கூறுவதே குற்றமென்று வாய்ப்பூட்டுச் சட்டத்தை
நாடுகளில் கொண்டுவந்தோர் காணாமல் போய்விட்டார்!
பாடுபட்டு மக்களாட்சி மாண்புகளைக் காப்பவர்கள்
ஏடுபோற்ற வாழ்வார் நிலைத்து.
29. நிலைத்தது செல்வமென்று தேடுகின்றார் மக்கள்!
துளைபோட்ட பானையிலே தண்ணீர்தான் செல்வம்!
நிரப்ப நிரப்ப வழிந்தோடும் செல்வம்!
விலக்கவேண்டும் ஆசையை நீ.
---------------------------------------------------------------------------------------------------------
30.நீயென்னைப் பெற்றெடுத்துக் கண்ணிமைபோல் பாதுகாத்தாய்!
நீபொழிந்த அன்பை நினைத்துச் சிலிர்க்கின்றேன்!
நானுன்னை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திருப்பேன்!
வான்மழை போன்றவளே தாய்.
--------------------------------------------------------------
0 Comments:
Post a Comment
<< Home