வாழ்வியல் அந்தாதி 1-5
1.அன்பில் களங்கமில்லை என்றால் அத்தகைய
அன்போ எலும்பை உருக்கிவிடும் என்பதே
உண்மையான அன்பிற்குத் தன்மையென்றார் ஞானிகள்!
அன்பின் வலிமையைப் பார்.
------------------------------------------------------------
2. பார்ப்பதும் கேட்பதும் மெய்யில்லை! கண்மணியே!
தீர விசாரிப்பதே மெய்யாம்! எனச்சொன்னார்!
பார்ப்பதைக் கேட்பதை வைத்து முடிவெடுத்தால்
வேரூன்றும் உட்பகைதான் சொல்.
---------------------------------------------------------------------------------------------------------
3. சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும்
நல்லவர்கள் பின்பற்றும் நல்லொழுக்கம்--- சொல்லொன்றும்
செய்யும் செயலொன்றும் என்றேதான் வாழ்பவர்கள்
பொல்லாதோர் பின்பற்றும் தீது.
------------------------------------------------------------------------------------------------------------------
4. தீதுக்குத் தூதுவிட்டு வாழாதே! தீயோரின்
சூதுக்குத் தோள்கொடுத்துச் சுற்றாதே! வன்சொல்லைக்
காது கொடுத்துக் கேட்காதே! வஞ்சகரைக்
காததூரம் தள்ளிவைத்தால் நன்று.
--------------------------------------------------------------------------------------------------------------------------
5.நன்றாய்ப் பழுத்த பழமரத்தை நாடித்தான்
வண்ணப் பறவைகள் நாடிவரும்-- சிந்தனை
ஊற்றெடுக்கும் ஞானம் செறிந்தவரைத் தேடிவந்து
போற்றுவார் நன்மக்கள் இங்கு.
-----------------------------------------------------------------------------------------

0 Comments:
Post a Comment
<< Home