Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாமி 11-15

 11 .பண்புகளைப் பின்பற்றி வாழ்வோரைப் போற்றுவார்!

   பண்பும் ஒழுக்கமும் இல்லாமல் இவ்வுலகில்

   கண்டபடி வாழ்வோரை தூசியாக எண்ணுவார்!

  பண்புகளே வாழ்க்கைக்குத் தூண்.


12. தூண்களில் மக்களாட்சித் தூண்களோ நான்காகும்!

   தூங்காமல் மக்களைக் காக்கின்ற நல்லரசு!

   வேண்டியவர் வேண்டாதோர் பாராத நீதிமன்றம்!

   மாண்புகளைக் காக்கின்ற மக்கள் உறுப்பினர்கள்1

   ஆண்மையுடன் அஞ்சாமல் தொண்டாற்றும் ஊடகங்கள்!

   நான்குதூண்கள் நாட்டுக்(கு) அரண்


13..அரண்கள் தனிமனித நல்லொழுக்கம் போற்றித்

  தரமுடன் தங்கள் கடமைகளைச் செய்தால்

  உலக அரங்கில் தலைநிமிரும் நாடு.

  தவறினால் என்றும் சரிவு.

14. சரிவுகள் வந்தால் தளர்வதும், ஏற்றக்

   களிப்பில் குதிப்பதும் இன்றி, இரண்டு

   நிலைகளையும் ஒன்றாய்ச் சமநிலையில் பார்க்கும்

   கலையினைக் கற்பது நன்று.


15.நன்றை மறப்பது நல்லதல்ல! அல்லதை

  அன்றே மறப்பது நன்றென்பேன்!-- புண்படுத்திப்

  பேசுவோரைப் பண்படுத்தும் பண்பை வளர்த்துக்கொள்!

  தேசமே போற்றும் நினைந்து.


0 Comments:

Post a Comment

<< Home