Friday, December 26, 2008

உண்மை

உயிருடன் இருக்கும்போது மதித்து நட!

உயிருடன் இருக்கும் போது
உண்மையாய் மதிக்க வேண்டும்!
நயமுடன் சுற்றத் தார்கள்
நாளெலாம் பழக வேண்டும்!

துயரமோ சூழும் போது
துணைக்கரம் நீட்ட வேண்டும்!
உயர்வினைக் காணும் போது
உவகையில் நீந்த வேண்டும்!

உலகினில் வாழும் போது
உறவினை விலக்கிக் கொள்வார்!
உளத்தினில் நச்சு எண்ணம்
உருவெடுத் தாட நிற்பார்!

களத்தினில் எதிரி யைப்போல்
கடுஞ்சினம் பொங்கப் பார்ப்பார்!
தளமெனும் மனித நேயம்
தகர்ந்திடும் செயலைச் செய்வார்!

இறந்ததும் ஓடி வந்து
இதயமோ வெடிக்கும் வண்ணம்
முறைகளைச் சொல்லிச் சொல்லி
முனங்குதல் நடிப்பே என்பேன்!

இருந்திடும் போது கூடி
இருப்பதே உண்மை என்பேன்!
இறந்தபின் செய்வ தெல்லாம்
இறந்தவ ரிடமா சேரும்?

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home