Wednesday, January 07, 2009

நெருடலற்ற வாழ்வுக்கு

அறத்தை ஏந்தும் சொற்களையே
அகத்தில் ஏந்திச் சொல்லுங்கள் !
மறந்தும் துரோக மகுடிக்கு
மயங்க வேண்டாம் வெல்லுங்கள்!

பறக்கும் பொய்மை வல்லூறைப்
பாய்ந்து பிடித்துத் திருத்துங்கள்!
சிறக்க வைக்கும் வாய்மைக்கு
சிரத்தைத் தாழ்த்தி நில்லுங்கள்!

அன்னை தந்தை ஆசானை
அகத்தில் வைத்துப் போற்றுங்கள்!
தன்னை வைத்தே எடைபோடும்
தன்ன லத்தை மாற்றுங்கள்!

என்றும் இங்கே தமிழ்விளக்கை
இல்லந் தோறும் ஏற்றுங்கள்!
பொன்னும் மணியும் இன்பமென்று
போற்றும் மனதைத் தூற்றுங்கள்!

மதுரை பாபாராஜ்
1985

0 Comments:

Post a Comment

<< Home