Sunday, February 28, 2010

கம்பராமாயணக் காட்சி

-- இராமன் காடேகும் செய்தி கேட்ட மக்கள் கருத்து

"ஆளான் பரதன் அரசு "என்பார்; "ஐயன் இனி
மீளான், நமக்கு விதி கொடிதே காண்!" என்பார்;
"கோளாகி வந்தவா கொற்ற முடிதான்" என்பார்;
"மாளாத நம்மின் மனம் வலியார் யார்?" என்பார் (1801)
-------------------------------------------------------------------------------------------------------

பரதனுக்கு ஆட்சியைத் தாய்தந்த போதும்
பரதன் தனக்குரிமை இல்லா அரசை
அரசாட்சி செய்ய இசையமாட்டான் என்றே
ஒருசிலர் கூறுவார் பார்.

தலைவன் இராமனோ கானகம் சென்ற
நிலையேற்ற பின்பு நகருக்குள் மீண்டும்
வருவதற்கே ஒப்பமாட்டான்! நம்விதி இங்கே
இருக்கிறதே என்பார் சிலர்.

அணிசெய்யக் காத்திருக்கும் மங்களம் பொங்கும்
மணிமகுடம் இன்றிங்கே தீமை பொழியும்
தனிக்கோளாம் தூமகேது கோளாகி ராமன்
வனம்செல்லச் செய்ததென்பார் ! சூழ்ந்து..

இத்தகைய தீங்கினைக் கேட்டபின்பும் கண்டபின்பும்
எப்படி நம்முயிர் நீங்காமல் வாழ்கின்றோம்?
இப்படி வன்நெஞ்சர் யார்தான் இருப்பாரோ?
உற்றபழி வந்ததென்பார் நொந்து.

மதுரை பாபாராஜ்
=========================================================





கம்பராமாயணக் காட்சி
கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒடித்தவனும்
ஒன்றுதானா என்றறிய சீதையோ -- வண்ண
வளையலைத் தொட்டுச் சரிபார்க்கும் சாக்கில்
உளமாரப் பார்த்தாள் உவந்து.
------------------------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி

கோசலை புலம்புதல்

கானகம் நோக்கி மைந்தன்
கடமையாய் விரைந்தே செல்வான்!
தேனகக் கணவன் நீயோ
திகைத்திட வைத்து விட்டு
வானகம் நோக்கிச் செல்வாய்!
வாழ்விலே கணவன் மைந்தன்
மான்விழி என்னை விட்டே
மறைதலும் தருமம் தானா?

கம்பராமாயணக் காட்சி

கணவனைத் துச்சமென எண்ணிய கைகேயி

காட்டில் திரியவேண்டும் ராமன்என்றும் தன்மகனோ
நாட்டில் முடிசூட்ட வேண்டுமென்றும் -- கேட்டு
வரம்பெற்றாள் கைகேயி! சொன்னசொல் மாறா
தயரதனும் தந்தான் தளர்ந்து.

எப்படி மன்றாடிக் கேட்டான் தசரதன்!
இப்படி அப்படி என்றே அசையாமல்
அப்படியே நின்றாள் கைகேயி!வென்றுவிட்டாள்!
அப்பப்பா ! காரிகைதான் கல்.

காரிகையின் வஞ்சத் தூரிகை தீட்டிய
காரிருள் ஓவியத்தின் வக்கிரம் தாங்காமல்
தேர்மன்னன் நொந்து விழுந்தான்! துடித்தான்!
பாரில் துயிலிழந்தான்! பார்.

தசரதனின் சோக நிலைகண்டு கோழி
சிறகினை மார்பில் அடித்தே அலற
கடமை தவறாத ஆதவன் அன்றும்
கடமையாய் வந்தான் உதித்து.

மதுரை பாபாராஜ்


கம்பராமாயணக் காட்சி
----------------------------------------
வசிட்டன் மனநிலை
(இராமன் இலக்குவன் மரவுரிக் கோலத்தில் )
----------------------------------------------------------------------
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என்இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன்,உணரும் தன்மையான்.(1857)
===============================================================
மரவுரி ஏந்தும் இருவரையும் பார்த்தான்!
வலம்வரும் ஊனக்கண் கொண்டே -- அவர்கள்
முகத்தையும் நெஞ்சத்தை ஞானக்கண் ணாலும்
அகம்நொறுங்கப் பார்த்தான் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்


கம்ப ராமாயணக் காட்சி
--------------------------------------
சுமித்திரையிடம் இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லுதல்
---------------------------------------------------------------------------------------------------
இருவரும் தொழுதனர்;இரண்டுகன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின், த்தையும் விம்மினாள்;
பொறு அரும் குமரரும் போயினர் புறம்
திரு அரைத்துகில் ஒரீஇச் சீரை சாத்தியே. (1847)
=================================================================
தாய்ப்பசுவின் கண்முன் ஒருசேர ஒரேநேரம்
சேய்க்கன்று இரண்டும் பிரிந்துசெல்லும் கோலத்தை
பார்ப்பதுபோல் தேம்பி நடுங்கி அழுதிருந்தாள்!
தாய்மனம் நொந்தது பார்.

மதுரை பாபாராஜ்

கம்ப ராமாயணக் காட்சி
--------------------------------------
இராமனுக்கு இலக்குவன் மறுமொழி
-------------------------------------------------------------
"நீர் உள எனின் உள மீனும் நிலமும்;
பார்உள எனின் உள யாவும்; பார்ப்புறின்
நார்உள தனு உளாய்?நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்?அருளுவாய்!" என்றான்.( 1851)
===============================================================
நீர்நிலைகள் உள்ளதால் மீன்களும் பூக்களும்
பாரில் உயிர்வாழும்!பூமி இருந்தால்தான்
சீராய் உயிரினங்கள் வாழுமண்ணா! எங்களுடன்
யாரிருந்தால் வாழ்வோம்?பகர்.

தாய்க்கு நிகரான சீதையும், நானுமிங்கே
யாரிருந்தால் நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்?-- நேர்மையின்
ஊற்றே! நீங்களே கூறுங்கள்! என்றேதான்
கேட்டான் இலக்குவன் தான்

மதுரை பாபாராஜ்


கம்ப ராமாயணக் காட்சி
------------------------------------------------------------------
இராமர் இலக்குவர் மரவுரிக் கோலம் கண்டு
பொதுமக்களின் துயரம்.
============================================
"மண்கொடு வரும் என வழி இருந்தது யாம்,
எண்கொடு சுடர்வனத்து எய்தல் காணவோ ?
பெண்கொடு வினை செயப்பெற்ற நாட்டினில்
கண்கொடு பிறத்தலும் கடை" என்றார் சிலர்.(1884)
==================================================
அரசுரிமை ஏற்று மணிமகுடம் தாங்கி
அரசாள ராமன் வருவான்பார் என்றே
அரண்மனையில் காத்திருந்தோம்! எங்களது எண்ணம்
கரைந்தே அழிந்தது காண்.

கானகம் நோக்கியவன் செல்கின்ற காட்சியைக்
காணவேண்டும் என்பதற்கா காத்திருந்தோம் நாங்களிங்கே!
ஊனமணப் பெண்ணின் இழிசெயலைப் பார்த்திருக்கும்
ஊன்கண்ணைத் தாங்கல் இழிவு.

மதுரை பாபாராஜ்

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------
சீதை அதிர்ச்சி அடைதல்:
-----------------------------------------------
அழுது , தாயரொடு , அருந்தவர் , அந்தணர் , அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் , புடைவந்து பொருமப்
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவையன்னாள் மனத்துணுக்கமொடு எழுந்தாள்.(1914)
=============================================================
அரசகோலம் ஏந்தும் கணவனைப் பார்க்கப்
பரபரப்பாய்க் காத்திருந்தாள் சீதை -- மரவுரிக்
கோலத்தில் ராமனைப் பார்த்ததும் நேரிழையாள்
சீரழிந்தாள் ! நொந்தாள் அதிர்ந்து.
----------------------------------------------------------------------------------------------------------

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ; ஏங்கிப்
பொழிந்த உண்கணீர் புதுப்புனல் ஆட்டினர்; புலம்ப
அழிந்த் சிந்தையள் , அன்னம், இதுஇன்னது என்று அறியாள்,
வழிந்தநீர் வெடுங்கண்ணினள், வள்ளலை நோக்கி.(1915)
============================================================
திரண்டுவந்த மாமியர் கண்ணீரைப் பார்த்து
கலக்கமுடன் காரணத்தைத் தேடி -- தவழ்ந்துவந்தாள்
தன்விழிகள் கண்ணீரைச் சிந்த இராமனை
அன்பரசி பார்த்தாள் அழுது.

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------

ராமன் கூறுதல்
---------------------------
"பொருவுகில் எம்பி புவி புரப்பான்;புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய்க்
கருவி மாமழைக் கல்கடம் கண்டுநான்
வருவென், ஈண்டு வருந்தலை நீ" என்றான்.(1917)
----------------------------------------------------------------------------

நாடாள வேண்டும் பரதனென்றும் நானிங்கே
காடேக வேண்டுமென்றும் தாய்தந்தை ஆணையிடார்!
காடேகி நான்வருவேன் ! மாதே ! வருந்தாமல்
மாடத்தில் இருஎன்றான்! நின்று.

சீதை வருந்துதல்
-----------------------------------------
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேயமண் இழந்தான் என்றும் விம்மிலர்;
"நீ வருந்தலை;நீங்குவென் யான்";என்ற
தீய வெம்சொல் செவிசுடத் தேம்புவாள்.(1918)
====================================================
தங்கணவன் கானகம் செல்கின்றான் என்பதற்கோ
மன்னன் அளித்த அரசுரிமை-- சென்றதற்கோ
சீதை அழவில்லை! இராமன் உதிர்த்திட்ட
கூடறுக்கும் சொற்கேட்டாள் வெந்து.



கானகம் சென்று வருகின்றேன்! நீயிங்கே
தேனகத்தில் சற்றும் வருந்தாமல் வாழ்ந்திரு!
மானே1 எனச்சொன்ன வெங்கொடுமைச் சொற்களால்
மானவள் தேம்பிநின்றாள்! பார்.

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------
ராமன் சீதையைத் தேற்றுதல்
---------------------------------------------------------
"வல்லரக்கரின் மால் வரை ஊடு எழும்
அல் அரக்கின் உருக்கு அழல்காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்கு உண்ட சேவடிப் போது" என்றான்.(1921)
============================================================
அரக்கர்கள் வாழும் மலையைக் கடக்கும்
கலக்கமிகு நேரத்தில் செம்பஞ்சு -- மலர்போன்ற
நின்பாதம் நோகுமம்மா! கற்கள் உறுத்துமம்மா!
என்றான் இராமன் கனத்து.
------------------------------------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
------------------------------------------------
சீதையின் மறுமொழி
-----------------------------------------------------------------------------------------
பரிவு இகந்த மனத்தொரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? என்றாள். (1922)
------------------------------------------------------------------------------------------
பெண்ணென்றும் எண்ணி இரங்காமல், அன்பரசி
உன்மனைவி என்கின்ற பற்றுதலும் இல்லாது
என்னைப் பிரிவதற்கு முற்படுவதை என்னென்பேன்?
இன்னலை ஏதென்பேன்? யான்.

கானகம் என்ன கடுமையா? அய்யகோ!
தேனகத்தில் நானிருக்க கானகத்தில் நீயிருக்க
ஈனமான அப்பிரிவைக் காட்டிலும் சுட்டெரிக்கும்
வேனலாமோ அக்காடு ? சொல்.
-------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------------
இராமனின் மனநிலை
-------------------------------------------------------
அண்ணல் அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்
உள்நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணீன் நீர்ககடல் கைவிட நேர்கிலன்;
எண்ணுகின்றனன், "என் செயற் பாற்று?' எனா.(1923)
------------------------------------------------------------------------------------------
சீதையின் சொற்களைக் கேட்ட இராமனோ
கோதையின் உள்ளக் கருத்தை உணர்ந்தேதான்
சீதை தவித்திருக்க உள்ளம் இசையவில்லை!
யாதுசெய்வேன்? என்றான் உழன்று.
----------------------------------------------------
சீதை மரவுரி உடுத்து எதிர் தோன்றுதல்
---------------------------------------------------------------------------
அனைய வேலை, அகல் மனை எய்தினாள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின்வந்து, அயல் நின்றனள்;
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.(1924)
----------------------------------------------------------------------------------------
அன்பரசி சீதையை யாருமே தூண்டாமல்
தன் கணவன் ராமன் உடுத்திய தைப்போல
அங்கே மரவுரிக் கோலத்தில் வந்தவள்
அண்ணலைப் பற்றிநின்றாள் சார்ந்து.
-------------------------------------------------------------------------------------------------------------
இலக்குவன்,இராமன்,சீதை செல்லுதல்
----------------------------------------------------------------------
"சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரிவில்கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது, உணர்த்தவும் ஒண்ணுமோ?" ( 1930)
===================================================

மரவுரி சுற்றிய சீதையோ பின்னும்
பெரியவில்லை ஏந்தி இலக்குவன் முன்னும்
கருமேக ராமன் இடையிலும் செல்ல
கலுழ்ந்தனர் இக்கோலம் கண்டு.


----------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
--------------------------------------
தேரோட்டி சுமந்திரனின் ஏக்கம் ததும்பும் கேள்விகள்
----------------------------------------------------
"தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என் கோ?
கோவினை உடன் கொடு குறுகினேன் என் கோ?
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்"?(1955)
======================================================
என்னை எதிர்வந்து கேட்கின்ற மக்களிடம்
உங்களைக் கானகத்தில் விட்டுவிட்டேன் என்பேனா?
என்னுடன் நீங்களும் வந்தீர்கள்! என்பேனா?
என்னசொல்லித் தேற்றுவேன் நான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------
"தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடு மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன்: பழைய நண்பினேன்,
தேரிடை வந்தனென் , தீதிலேன் என் கோ?"(1956)
=========================================================================
சீதையை ராம இலக்குவரைக் காட்டினிலே
வேதனைக்கு உள்ளாக்கி கால் நோக செல்லவிட்டு
சோதனையே இன்றி சுகமாக நான்வந்தேன்
தோதாக என்பேனா?நான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வன்புலக் கல்மன மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்
உன் புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கேனோ?
தென்புலக் கோமகன் தூதில் செல்கேனோ?(1957)
========================================================================
மனமுடைந்து வாடும் தசரதனைப் பார்த்து
குணக்குன்று நீசொன்ன சொற்களைச் சொல்லி
வணங்கவா? த்ற்கின் இயமனுக்குத் தூதாய்
இணக்கமுடன் செல்லவா? நான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
"நால்திசை மாந்தரும் நகர் மாக்களும்
"தேற்றினர் கொணர்வர் என்சிறுவன் தன்னை"என்று
ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன் கொலோ?(1958)
==========================================================================
மக்களெல்லாம் ராமனைத் தேற்றிக் கொணர்ந்திடுவார்
இக்கணமே என்றே உயிர்வாழும் மாமன்னன்
அக்கறையாய்ப் பார்க்க கொடுஞ்சொல்லைச் சொல்வதால்
குட்றம் சுமப்பதா?நான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
"அங்கிமேல் வேள்வி செய்து, அரிதின்பெற்ற, நின்
சிங்கஏறு அகன்றது" என்று உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு இனி என்னில், கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்.(1959)
============================================================================
உன்னன்னைக் கைகேயி இன்னலைத்தான் தூவினாள்!
என்சொல்லோ மன்னனின் இன்னுயிரைப் போக்கிவிடும்!
மண்ணுலகில் கைகேயி நல்லவளாய் மாறிவிட
என்னை பலியிடவோ நான்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------
இராமன் கூறிய தத்துவம்
--------------------------------------------------
நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற
மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று; அரோ
இறப்பினும் , திருஎலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.(1964)
===================================================
போர்க்கள வீரமோ வீரமல்ல ! வாழ்விலே
தாழ்வுநிலை வந்தபோதும் செல்வங்கள் சென்றபோதும்
வாழ்வில் அறவழியில் துன்பத்தைச் சந்திப்போர்
வீரராவார் இவ்வுலகில் தான்.

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------
இலக்குவன் சுமந்திரனிடம் கூறியவை:
---------------------------------------------------------------------
"உரைசெய்து எம்கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு
விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்றுஅறையற் பாலதோ?"(1977)
============================================================
உனக்குத்தான் இவ்வரசு என்றுசொல்லி விட்டு
மனைவிக்கு வாக்குறுதி தந்து இராமன்
வனமேகச் செய்த தசரதனை மன்னன்
எனக்கூறல் நன்றோ? உரை.
------------------------------------------------------------------------------------------------------
"கானகம் பற்றி நற்புதல்வன் காய்உணப்
போனகம் பற்றிய பொய்இல் மன்னற்கு, இங்கு
ஊன்அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு" என்றான். (1978)
========================================================
காட்டில் கிடைக்கும் உணவுகளை ராமனோ
கூட்டிவைத்தே உண்ண , அறுசுவை உண்டியை
நாட்டில் ருசித்து மகிழும் அரசனிடம்
காட்டின் துயரத்தைச் சொல்.


என்றே மனக்கொதிப்பை லெட்சுமணன் சீறியே
சிந்தினான் கோப அனல்மழையை அங்கேதான்!
தன்னுடைய ஏமாற்ற எண்ணத்தை இவ்வாறு
தன்கருத்தாய்க் கூறினான் சாற்று.
-------------------------------------------------------


கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------
சீதா தேவி வருந்தாது வழி நடத்தல்
----------------------------------------------------------------
சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்தியசெல்வம் என்னும்
நெறி இருங்கூந்தல் நங்கை சீறடி நீர்க்கொப்பூழின்
நறியன தொடர்ந்துசென்று நடந்தன; நவையுள் நீங்கும்
உறுவலி அன்பின்ஊங்கு ஒன்றுஉண்டு என உணர்வதுண்டோ?(1987)
------------------------------------------------------------------------------------------------------------------------
சீதையின் மெல்லிய பாதங்கள் நீர்க்குமிழி
ஊடகம்போல் மென்மை படைத்தவை! அத்தகைய
பாதங்கள் ராமனைப் பின்பற்றிச் செல்வதற்குத்
தோதாய் வலிமையைப் பற்றது என்றாலோ
தோகை கணவன்மேல் வைத்திருக்கும் அன்பிற்கு
ஈடாக ஒன்றுண்டோ ? கூறு.
--------------------------------------------------------------------
தசரதன் "ராமன் வந்துவிட்டானா" எனல்
-------------------------------------------------------------------------
"இரதம் வந்துற்றது" என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்
"வரதன் வந்துற்றான்" என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்;
புரைதபு கமலனாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
விரத மாதவனைக் கண்டான் " வீரன் வந்தனனோ?" என்றான்.(1992)
=====================================================================
ராமனை ஏற்றிச் சுமந்துசென்ற தேரங்கே
தேனகத்தில் வந்துநின்ற சேதிகேட்டு மன்னனோ
ஊன்விழிகள் துள்ள முனிவனிடம் வந்தானா
ராமன்? எனக்கேட்டான் துடித்து.

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------
தசரதன் தளர்தலும் முனிவன் செல்லுதலும்
-------------------------------------------------------------------------------
"இல்லை" என்று உரைக்கலாற்றான்;
ஏங்கினன் முனிவன் நின்றான்;
நல்லவன் முகமே நம்பி
வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்;
துயர்உறும் முனிவன், "நான்இவ்
அல்லல் காண்கிலேன்" என்னா,
அங்கு நின்று அகலப்போனான்.(1993)
================================================
ராமன் வரவில்லை என்பதைச் சொல்லாமல்
ஞானமுகம் வாடக் குறிப்பல் உணர்த்தினான்!
மாமன்னன் மீண்டும் மயங்கிச் சரிந்துவிட்டான்!
ஞானமுனி நீங்கினான் விட்டு.
--------------------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------
தசரதன் உயிர் பிரிதல்
----------------------------------------------------------------------------
நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி " நம்பி
சேயனோ? அணியனோ?" என்று உரைத்தலும், தேர்வலானும்
"வேய்உயர் கானம் தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்
போயினன், என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.(1994)
==================================================================
இராமனோ தூரத்தில் வருகின் றா னோசொல்?
ஆனமட்டும் கேட்டான் சுமந்திரனை நோக்கித்தான்!
மூவரும் காட்டுக்குள் சென்றுவிட்டார் என்றதுமே
ஆவியை நீத்தான் அதிர்ந்து.

கம்பராமாயணக் காட்சி
---------------------------------------
தசரதன் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இடுதல்
----------------------------------------------------------------------------------------------
"செய்யக்கடவ செயக்கு உரிய
சிறுவர் ஈண்டையர் அல்லர்;
எய்தக் கடவபொருள் எய்தாது
இகவா என்ன இயல்பு?" என்னா,
"மையல் கொடியாள் மகன் ஈண்டு
வந்தால் முடித்தும் மற்று" என்னாத்
தையல் கடல்நின்று எடுத்து அவனைத்
தைலக் கடலின்தலை உய்த்தான்" (2010)
========================================================
தசரத மன்னன் உயிர்பிரிந்த போது
மகன்கள் ஒருவரும் பக்கத்தில் இல்லை!
மகனாம் பரதன் வரும்வரையில் வேந்தன்
உடல்தன்னைத் தைலக் கடாரத்தில் இட்டுக்
கெடாமல் இருக்குமாறு பாதுகாக்கச் சொன்னான்
அறவோன் வசிட்டன்தான் அங்கு.
--------------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home