Thursday, February 25, 2010

குறுந்தொகைக் காட்சிகள்

================================
பாடல் 1. குருதிப்பூ(செங்களம் படக் கொன்று) பாடியவர்: தீப்புத் தேளார்
======================= ============================
அவுணர் படையை அழித்த முருகன்
தவம்செய்யும் குன்றமிது!மேலும் -- களத்தின்
குருதிநிறச் செங்காந்தள் பூக்கள் மலிந்து
பரவிநிற்கும் நாடென் றறி .
======================================================
பாடல்2. நறுமணக் கூந்தல் (கொங்குதேர் வாழ்க்கை)
பாடியவர்:இறையனார்
=======================================================
என்னவளின் கூந்தல் மணத்திற் கிணையாக
இன்னுமொரு பூமணம் உள்ளதோ?-- தும்பியே!
என்னைத் திருப்திப் படுத்துகின்ற எண்ணமின்றி
நன்றாக ஆய்ந்தறிந்து சொல்.
===================================================

பாடல் 3. நிலத்தினும் நீரினும்(நிலத்தினும் பெரிதே;வானினும் உயர்ந்தன்று;)
பாடியவர்:தேவகுலத்தார்
==================================================================
தலைவன்மேல் நான்கொண்ட மாசற்ற அன்போ
நிலப்பரப்பை விஞ்சும் அகலம் -- அழகான
வானத்தை விஞ்சும் உயரம் ! கடல்நீரை
நாணவைக்கும் ஆழம் ! உணர்..
==================================================================
பாடல் 6. துஞ்சாதேனே!(நள்ளென்ற றன்றே, யாமம்; சொல் அவிந்து )
பாடியவர்:பதுமனார்
==================================================================
தாயும் உறவினரும் ஊராரும் எல்லோரும்
நோய்தரும் நள்ளிரவின் இப்பொழுதில் தூங்குகின்றார்!
நீயும் உறங்குகின்றாய் தோழியே!காய்கின்றேன்
தேய்கின்றேன் தூக்கமின்றி நான்.
==================================================================
17. முதிர்ச்சி அடைந்தால்! பாடியவர்:பேரெயின் முறுவலார்
================================================================
பாடல்:மாஎன மடலும் ஊர்ப்ப;பூஎனக் ………
--------------------------------------------------------------
காமம் மிகுந்தால் மடல்குதிரை ஏறுவேன்!
நாணமின்றி நானோ எருக்கமாலை சூடுவேன்!
ஆணவத்தில் ஊரார் இருந்தாலோ வேறுசெயல்
ஆனமட்டும் செய்திடுவேன்!சொல்.
---------------------------------------------------------------------------------------------------------

18. சிறிதும் பெரிதும் ( பாடியவர்:கபிலர்)
============================================
பாடல்:வேரல் வேலி வேர்க்கோட் பலவின் ....
==============================================
சிறுகொம்பில் தொங்கும் பெரும்பலாவைப் போல
சிறுஉயிரில் தூங்குகின்ற காமம் பெரிதே!
அறிந்துகொள்! வந்து மனந்துகொள்! என்றே
அறிவுரையைத் தோழிசொன்னாள்! அங்கு.
--------------------------------------------------------------



21.யான் தேறேன்--பாடியவர்:ஓதலாந் தையார்
======================================================
பாடல்:வண்டுபடத் ததைந்த கொடியஇணர் இடையிடுப
===========================================================
கொன்றை மலர்பூத்த காலந்தான் கார்காலம்
என்றேதான் சொன்னாலும் நம்பமாட்டேன்!-- என்தலைவன்
பொய்சொல்லும் நெஞ்சினன் அல்லவே!கார்காலம்
மெய்யல்ல!ஏற்கமாட்டேன் !போ.

25. குருகும் உண்டு -- பாடியவர்:கபிலர்
============================================
பாடல்:யாரும் இல்லை;தானே களவன்;....
--------------------------------------------------------------நானும் அவரும் களவில் திளைத்திருந்தோம் !
நானோ விரைந்துவந்தே உன்னை மணம்புரிவேன்
மானே! எனச்சொன்னார்!மாறுவாரோ?சாட்சியிங்கே
மீன்பிடிக்கும் நாரைமட்டும் தான்.

28.அறியாது துஞ்சும் ஊர் --பாடியவர்:அவ்வையார்
=======================================================
பாடல்:முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?....
--------------------------------------------------------------
என்காம நோயை எவரும் அறியாமல்
நன்றாய் உறங்குகின்றார்!எப்படிச் சொல்வேனோ?
என்தோழி!முட்டுவேனோ?தாக்குவேனோ?கூவுவேனோ?
என்செய்வேன்?நானறியேன்!பார்.








30.யான் அளியேன் --பாடியவர்:கச்சிப்பேட்டு நன்னாகையார்
==================================================================
பாடல்:கேட்டிசின் வாழி - தோழி! - அல்கல்,.....
----------------------------------------------------------------------------------------------------------------------
சொன்னதுபோல் அன்பர் வரவில்லை!ஆனாலும்
என்னைத் தழுவுதல்போல் நானோ கனவுகண்டேன்!
கண்மயக்கம் நீக்கிப் படுக்கையைத் தொட்டபோது
நன்குணர்ந்தேன் என்தனிமைத் தீ.

35. கண் நாணில(பாடியவர்:கழார்க்கீரன் எயிற்றி )
====================================================
பாடல்:நாண்இல மன்ற , எம் கண்ணே -- நாள்நேர்பு,.....
--------------------------------------------------------------------------------------------------
அன்பர் பிரிந்துசென்ற நாளில் இணங்கிய
கண்களோ, இந்தக் குளிர்ப்பருவந் தன்னிலே
இன்னும் வரவில்லை என்றே அழுகிறதே!
கண்களுக்கோ நாணமில்லை ! பார்.

40. நெஞ்சம் கலந்தன!பாடியவர்:செம்புலப் பெயனீரார்)
=========================================================.
பாடல்: யாயும் ஞாயும் யாரா கியரோ?
--------------------------------------------------------------
நம்முடைய பெற்றோர்கள் எவ்வகையில் சொந்தமாவார்?
கண்மணியே!நானிங்கே நீயிங்கே எப்படி
ஒன்றுபட்டோம்? செம்மண்ணில் நீர்கலந்த தன்மைபோல்
நெஞ்சங்கள் ஒன்றின! பார்.






43. இருபேர் ஆண்மை!(பாடியவர்:அவ்வையார் )
==================================================
பாடல்:'செய்வார் அல்லர்' என்று யான் இகழ்ந் தனனே;....
--------------------------------------------------------------
பிரிவதை எண்ணமாட்டார் என்றேதான் நானும்
பிரிவதைத் தாங்கமாட்டேன் என்றே அவரும்
இருநிலைப் போரில் இதயங்கள் சோர்ந்தே
வருந்தினோம் கண்மூடிக் கொண்டு.

ஒருவரை மட்டுமே நல்லபாம்புத் தீண்டிச்
சுருக்கென்று கவ்வினாற்போல் என்னுடைய நெஞ்சம்
பெருக்கெடுக்கும் துன்பத்தில் தோய்ந்து கலங்கும்
ஒருநிலை பெற்றதேன்? சொல்.


44.பிறர் பலரே (பாடியவர்:வெள்ளி வீதியார்)
===================================================
பாடல்:காலே பரிதப் பினவே; கண்ணே ..........
--------------------------------------------------------------
கால்களும் ஓய்ந்தன!கண்களும் சோர்ந்தன!
ஊர்ந்திடும் விண்மீன்கள் எண்களைக் காட்டிலும்
பாரிலே ஆடவர்கள் உள்ளனர்!காதலர்
யாரெனத் தேடுவேன்?சொல்.

49.பிரியாத பேருறவு (பாடியவர்:அம்மூவனார்)
===================================================
பாடல்:அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து ..............
--------------------------------------------------------------
காரன்னம் கூடும் கடற்கரை நாடனே!
தூயதான இப்பிறவி போயும் மறுபிறவி
தாளவிழும் போதும் உனக்கு மனைவியாகும்
வாழ்வே எனக்குவேண்டும்! ஆம்.
---------------------------------------------------------------------------------------------------------

58.நோன்று கொளற்கு அரிது (பாடலாசிரியர்:வெள்ளி வீதியார் )
=================================================================
பாடல்:இடிக்கும் கேளிர்!நும்குறை ஆகம் .......
==================================================================
என்னை இடித்துரைக்கும் போக்குள்ள மாந்தரே
என்னுடம்போ காமநோய் தாக்கி அழிவதற்கு
முன்பாக அந்த அழிவைத் தடுத்திடுங்கள்!
நன்மை அதுவொன்றே யாம்.

கதிரவன் சூட்டிலே பாறையில் வெண்ணெய்
தகித்தே உருகுவதைக் கையில்லா ஊமை
துடிப்புடனே பார்ப்பதுபோல் என்னுயிரைக் காமம்
நசிப்பதைக் காத்தல் அரிது.

மதுரை பாபாராஜ்


60. காண்டலும் இனிதே (பாடலாசிரியர்:பரணர் )
===================================================
பாடல்:குருந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப் ...........
=====================================================
தேன்கூட்டைக் கண்டு முடவனோ உள்ளங்கை
ஏந்திக் குவியவைத்துக் கூடிற்குக் கீழ்வைத்தே
ஏங்கித்தான் நக்குவான் ! என்னவனைக் காண்பதொன்றே
மான்விழிக்கும் இன்பமாகும் இங்கு.

மதுரை பாபாராஜ்









67.நினையாரோ (பாடலாசிரியர்:அள்ளுர் நன்முல்லை)
============================================================
பாடல்:உள்ளார் கொல்லோ -- தோழி! -- கிள்ளை....
===========================================================
பெண்ணணியாம் பொற்காசு மாலையின் நூலிங்கே
நைந்ததும் புத்தம் புதுநூலை மாற்றுவர்!
அந்நிலையில் மாதரின் நகமோ கிளிமூக்காய்
அங்கிருக்க பொற்காசு வேப்பம பழம்போல
கண்களுக்குத் தோன்றுமாம்!நம்தலைவர் காட்டிலே
கண்கவர் பச்சைக் கிளிமூக்கில் அப்பழத்தைக்
கண்டவுடன் நம்நினைவு தோன்றாதோ?என்தோழி!
என்றேதான் கேட்கின்றாள் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home