Monday, August 15, 2011

நாட்டின் அவலத்தைப் பார்!


============================
அன்னா ஹசாரேயின் உண்ணா விரதத்தைக்
கண்டபடி பேசுகின்றார்!கண்டனம் செய்கின்றார்!
பண்பற்ற சொற்களைப் புண்படுத்தி வீசுகின்றார்!
உண்மைக்கு நெற்றியடி பார்.

ஊழலை நாங்கள் ஒழித்திடுவோம் என்றேதான்
ஊருக்(கு) உபதேசம் செய்தேதான் ஆட்சியின்
தேரை நகர்த்துகின்றார்! ஊழலே மூச்சென்று
காவடித் தூக்குகின்றார் காண்.

ஊழல் ஒழியவேண்டும்! மாற்றுக் கருத்தில்லை!
ஊழல் புகாரின் வரம்புக்குள் சிக்கமாட்டோம்!
ஊழல் விசாரணைக்கு நாங்கள் தயாரில்லை!
ஊழல் நகைக்கிறது பார்.

அறவழியைத் தேர்ந்தெடுத்துப் போராட்டம் செய்தால்
குதர்க்கமாகப் பேசித் திசைத்திருப்பு கின்றார்!
பதைபதைப்பு! காழ்ப்புணர்வு! அம்மம்மா! அந்தோ!
தகர்த்தெறியப் பார்க்கின்றார்! சாற்று.

ஆட்சியில் உள்ளவர்கள் என்னென்ன செய்தாலும்
காட்சிப் பொருளாகப் பார்க்கவேண்டும்! யாருமிங்கே
ஆட்சியின் ஊழலைக் கேள்விகேட்கக் கூடாது!
நாட்டின் அவலத்தைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home