Monday, October 17, 2016

க்
இக்கரைக்கு அக்கரை என்றும் அழகுதான்!
பக்கத்தில் சென்றால் அழுக்கு.
ங்
தங்குதடை கொண்டதுதான் வாழ்க்கை! தளராமல்
சந்தித்தால்  வாழலாம் நீ.
ச்
துச்சமாய் எண்ணிப் புறக்கணித்தால் நாளையே
நிற்போம் அவர்முன் சிரித்து.

ஞ்
அஞ்சவேண்டும் பொய்சொல்ல! மெய்சொல்ல அஞ்சாதே!
அஞ்சுவதற் கஞ்சவேண்டும் நீ.
ட்
தட்டி எழுப்புக் குறளுணர்வை வீட்டிலே!
வெற்றிக் கொடிநாட்டும் நாடு.
ண்
தண்ணீரில் கண்டம் தமிழனுக்கு!கேட்டாலும்
சென்றாலும்  தாக்குவார் பார்.
த்
செத்தாலும் உன்பெயரைச் சொல்லவேண்டும்! பண்புகளால்
வாழ்வமைத்து வாழ்வாங்கு வாழ்.
ந்
செந்தமிழாம் தாய்மொழியைக் கற்கத் தயங்குவோர்
எந்தமொழி கற்றாலும் வீண்.
ப்
முப்பால்  உரைக்கின்ற நல்லறத்தைப் பின்பற்று!
எப்போதும்  நிம்மதி உண்டு.
ம்
நம்பிக்கை தன்னை இழக்காமல் வாழ்பவர்க்கே
என்றும் விடியல் உணர்.
ய்
எய்தவரைப் போற்றுகின்றார்! அம்புகளைத்  தூற்றுகின்றார்!
இவ்வுலக மக்கள் இயல்பு.

ர்
கர்வம்,சுயநலம் மற்றும் மதியாமை
நல்ல குணங்களல்ல பார்.
ல்
நல்லவரின் வான்மீது வல்லூறு வட்டமிடும்!
நல்லவராய் வாழ்வதா தீது?
வ்
எவ்வழியில் சென்றாலும் இங்கே தடையென்றால்
எவ்வழியில் செல்வது? சொல்.
ழ்
வாழ்வை வளைத்தல் அரிது! வளைந்துகொடு
வாழலாம் என்றும் மகிழ்ந்து.
ள்
துள்ளும் இளமையில் நல்லொழுக்கப் பாதையைத்
தள்ளிவிட்டால் வாழ்வே இருள்.
ற்
முற்போக்கு நாட்டிலே! பிற்போக்கு வீட்டிலே!
எத்தனை வேடங்கள்? சொல்.
ன்
தன்னலத்தின் பின்னணியில் இங்கே பொதுநலத்தை
முன்னணியில் வைப்பது தப்பு.

0 Comments:

Post a Comment

<< Home