Sunday, February 03, 2019

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

சித்தப்பா! சித்தப்பா!
குறளுக்குப் பொருள் என்னப்பா?

கொஞ்சம் சொல்லு சித்தப்பா!
கொஞ்சிச் சொல்லு சித்தப்பா!

மழையே பெய்ய வில்லையென்றால்
நாட்டின் நதிகள் வறண்டுவிடும்!

மாநிலங் களுக்குள் போராட்டம்
தினமும் நடக்கும் காட்சியாகும்!

ஒவ்வொரு மாநில நீர்வளங்கள்
எல்லாம் இங்கே சுருங்கிவிடும்!

விளைச்சல் இன்றி மக்களெல்லாம்
பஞ்சம் பட்டினி என்றலைவார்!

தேவைக் கிங்கே அல்லாடும்
சூழல் தானே உருவாகும்!

கொள்ளை திருடு என்றேதான்
ஒழுக்கக் கேடு உருவாகும்!

தண்ணீர் உலகின் உயிர்மூச்சு!
நீரைத் தருவது மழையாகும்!

இதுதான் குறளின் பொருளாகும்!
நீரைச் சேமித்தல் கடனாகும்!


0 Comments:

Post a Comment

<< Home