Wednesday, January 27, 2021

110 குறிப்பறிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

110 குறிப்பறிதல்

(தலைவியின் குறிப்பைத் தலைவன் அறிதல்)

குறள் 1091:

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


பூவிழியாள் நோக்கிரண்டு! காதல்நோய்  ஒன்றுதரும்!

நோய்க்கு மருந்தளிக்கும்  ஒன்று.

குறள் 1092:

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.


கடைக்கண் பார்வையோ பாதியல்ல, காதல்

சிறையின் பெரும்பாதி யாம்.

குறள் 1093:

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.


நோக்கினாள்! பார்த்தேன் தலைகுனிந்தாள்! அன்பென்னும்

பாத்தியில்  ஊற்றியநீர் சாற்று.

குறள் 1094:

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்.


நான்பார்க்கும் போது நிலத்தை அளக்கின்றாள்!

பார்க்காத போதென்னைப் பார்த்தே மனதிற்குள்

கோர்க்கின்றாள் முத்துநகை யை.

குறள் 1095:

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.


என்னையோ பார்க்காமல்  கண்ணைச் சுருக்கிவைத்தே

என்னைத்தான் பார்ப்பாள் மகிழ்ந்து.

குறள் 1096:

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.


என்னைச் சினந்தே அயலார்போல் பேசுகின்றாள்!

அன்பை உணர்த்தும் குறிப்பு.

குறள் 1097:

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.


அனல்மொழி மற்றும் அனல்விழி எல்லாம்

மனக்காதல் தூதின் குறிப்பு.

குறள் 1098:

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.


பார்ப்பேன்! குறும்பாய்ச் சிரிப்பாள்! அடடா!

நேரிழையாள் ஏந்தும் அழகு.

குறள் 1099:

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.


முன்பின் தெரியாதோர் பேசுதல்போல் காதலர்

கண்களின் தூதோ இயல்பு.

குறள் 1100:

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.


பாயும்கண்  காதல் மொழியை உரைத்தபின்

வாய்ச்சொல்லால் என்னபயன் செப்பு?

































0 Comments:

Post a Comment

<< Home