Sunday, January 03, 2021

58 கண்ணோட்டம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

58 கண்ணோட்டம்

(இரக்கம்)

குறள் 571:

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.


இரக்கமெனும் பண்போ இருப்பதால்தான்  இந்த

உலகம் நிலைத்ததென்றே சொல்.

குறள் 572:

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.


இரக்கம் இயக்குதே இவ்வுலகை! அந்த

இரக்கமற்றோர் பாரின் சுமை.

குறள் 573:

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்

கண்ணோட்டம் இல்லாத கண்.


கண்ணோட்டம் இல்லாத கண்ணும் இசையோடு

ஒன்றாத பண்ணுமென்றும் வீண்.

குறள் 574:

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்

கண்ணோட்டம் இல்லாத கண்.


கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்திலே

உள்ளன! நன்மையென்ன கூறு.

குறள் 575:

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்

புண்ணென் றுணரப் படும்.


கண்ணோட்டம் கண்ணின் நகையாகும்! இல்லையெனில்

கண்ணல்ல வெற்றுப் புண்.

குறள் 576:

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைடந்துகண் ணோடா தவர்.


கண்ணிருந்தும் கண்ணோட்டம. இல்லாதோர், மண்ணில்

ஒன்றியே நிற்கும் மரம்.

குறள் 577:

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.


கருணையுள்ளோர் மட்டுமே கண்ணுள்ளோர்! வாழ்வில்

கருணையற்றோர் கண்ணற்றோ ராம்.

குறள் 578:

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்

குரிமை உடைத்திவ் வுலகு.


கடமையுடன் கண்ணோட்டம் நாள்தோறும்  கொண்டோர்க்( கு)

உடைமையாம் இந்த உலகு.

குறள் 579:

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.


புண்படுத்திப் பார்ப்போரைக் கண்ணோட்டம் கொண்டேதான்

பண்படுத்திப் பார்த்தல் சிறப்பு.

குறள் 580:


பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.


நண்பர்கள் நஞ்சனைய தீமையைச்

செய்தாலும் 

பண்பாளர் ஏற்பார் பொறுத்து.



மதுரை பாபாராஜ்

 




























0 Comments:

Post a Comment

<< Home