Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாதி 31-35

 31.தாயை மறந்தவன் இங்கே மனிதனல்ல!

  தாய்நாட்டைத் தூற்றுபவன் என்றும் துரோகிதான்!

  தாய்மொழியைச் சாடுபவன் கோடரிக் காம்பென்பேன்!

  தாய்மைக்கு நன்றியுடன் வாழ்.


32.வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்றேதான்

  வாழ்வில் நெறிமுறையைப் பின்பற்றி வாழ்ந்திருந்தால்

  சூழ்ந்திருக்கும் ச்ற்ரமும் நட்பினமும்! கண்டபடி

  வாழ்ந்தால் விலகும் கலைந்து.


33. கலைவதும் கூடுவதும் வாழ்வின் இயல்பு!

   கலைகின்ற நேரமும் கூடுகின்ற போதும்

   நிலையாய்ப் பகைவளர்க்கும் கோபத்தைக் காட்டி

   உலைவைக்க லாமா உறவு?


34.உறவின் நிழலில் உவகை பெருகும்!

  உறவின் பகையில் உளைச்சல் துளைக்கும்!

  உறவுகள் வாழ்வின் உயிர்த்துடிப் பாகும்!

  உறவுகள் இல்லறத்தின் வேர்.

35. வேரூன்றி நின்றால் மரங்கள் நிமிர்ந்திருக்கும்!

   வேர்தளர்ந்து போனால் மரங்களோ தள்ளாடும்!

   சூழ்நிலைகள் நன்றா? மனிதன் சிரித்திருப்பான்!

   பாழானால் வாடிநிற்பான் நொந்து.

0 Comments:

Post a Comment

<< Home