Friday, March 27, 2026

வாழ்வியல் அந்தாதி 51-55

 51.உயிருள்ள போதோ உணவின்றி நாளும்

  தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்தவ ரெல்லாம்

  உயிர்போன பின்னே படையலைப் போடும்

  இழிமனம் கொண்டதேன்? கூறு.


52.கூறுவதை இங்கே தெளிவாய்ச் சுருக்கமாய்க்

  கூறுகின்ற நுட்பமும் பக்குவமும் நாட்டுக்கு

  நாடுசென்று செய்திகளைச் சேகரிக்கும் ஒற்றர்கள்

  பாடுபடும் ஆற்றலுக்கு வித்து.


53.வித்தின்றி மண்ணிலே நல்விளைச்சல் காணலாம்!

  இத்தரணி மீது விருந்தினர் உண்டபின்

  மிச்சத்தை உண்பார் நிலத்தில் விதைக்காமல்

  எக்காலும் பொன்விளைச்சல் உண்டு.


54.உண்டு களிப்பதும் தூங்கி விழிப்பதும்

  என்றிருத்தல் சோம்பேறி வாழ்க்கையாம்----கண்ணே!

  எறும்பு, பறவைகள்போல் சோம்பலை நீக்கிச்

  சுறுசுறுப்பாய் வாழ்தல் அறிவு.


55. அறிவார்ந்த சான்றோர் அவையில் தனது

  அறியாமை தன்னை அறிவாற்றல் என்றே

  பறைசாற்ற முற்பட்டால் எல்லோரும் பார்த்தே

  அறிவிலி என்பார் நகைத்து.

0 Comments:

Post a Comment

<< Home