சுற்றந்தழால்---53
திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------------------
சுற்றந்தழால்---53
----------------------------------------------------------------
இருப்பதை எல்லாம் இழந்தே தவித்தாலும்
பழம்பெரும் தொடர்பைக் கூறுவார் சுற்றத்தார்!
அன்பைப் பொழியும் சுற்றம் அமைந்துவிட்டால்
அதுவே செல்வம் வளரும் நிலைதருமே!
சுற்றத் தாருடன் சேராத வாழ்க்கையோ
கரையிலா குளத்தில் நீர்போல் பயனில்லை!
சுற்றத் தாருடன் சூழ்ந்தே இருப்பதுவோ
குன்றாச் செல்வம் பெற்றதன் பயனாகும்!
ஈகையும் இன்சொல்லும் சுற்றத்தார் போற்றிடவே
பேணும் நற்பண்பால் சுற்றம் சூழ்ந்திருக்கும்!
சினத்தைத் தவிர்த்தும் கொடையில் சிறந்துமிங்கே
வாழ்பவனைப் போலிங்கே சுற்றமுள்ளோன் யாருமில்லை!
இருக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் காகம்போல்
செல்வந்தர் இருந்தால் அவர்செல்வம் பெருகிவரும்!
சமநிலைப் பார்வையில் அனைவரையும் பார்க்காமல்
குணங்களுக் கேற்பப் பழகிடும் மனங்கொண்டால்
சுற்றம் விலகாமல் சூழ்ந்தேதான் வாழ்ந்திருப்பார்!
காரணத்தைச் சொல்லிப் பிரிந்துசென்ற உறவுகளோ
காரணம் நீங்கியதும் மீண்டுமிங்கே சேர்ந்திடுவார்!
மீண்டும் திரும்பிவந்த உறவுகளை அரவணைத்தே
உறவிலே இணைத்துக் காப்பதுதான் நற்பண்பாம்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home