Wednesday, March 25, 2026

பொச்சாவாமை---54

 திருக்குறள் குழந்தைப் பாடல்

------------------------------------------------------------

பொச்சாவாமை---54

---------------------------------------------------------------

மகிழ்ச்சியில் திளைத்துக் கடமையை மறப்பதோ

கடுஞ்சினம் காட்டிலும் தீமையைத் தந்துவிடும்!


அறிவைக் கெடுக்கும் வறுமையைப் போலவே

மறதியோ ஒருவரின் புகழைக் கெடுத்துவிடும்!


மறதிநிலை கொண்டவர்க்குப் புகழில்லை உலகத்தில்!

கற்றுணர்ந்த நூலோர்க்கும் முடிவான கருத்திதுவே!


அச்சத்தைக் கொண்டவர்க்கோ பாதுகாப்பால் பயனில்லை!

மறதியை உடையவர்க்கோ செல்வத்தால் பயனில்லை!


துன்பங்கள் வரும்முன்னே காப்பாற்ற மறந்தவனோ

வந்தபின் பிழையெண்ணி வாழ்வினிலே வருந்திடுவான்!


மறவாமை வாழ்வினிலே துணையாக அமைந்துவிட்டால்

மனிதருக்கு நன்மையென்று சொல்வதற்கு வேறுண்டோ?


மறவாமை கொண்டேதான் செயல்புரியும் ஒருவருக்கு

முடியாத செயலென்று உலகத்தில் இல்லையே!


உயர்ந்தோர் புகழ்ந்ததைப் பின்பற்றி வாழவேண்டும்!

மறந்தவர்க்கோ ஏழு பிறவியிலும் பயனில்லை!


மகிழ்ச்சியில் திளைத்தேதான் கடமையை மறப்பவர்கள்

மறதியினால் அழிந்தவரை எண்ணித்தான் பார்க்கவேண்டும்!


எண்ணியதைச் செய்வதற்குச் சோர்வின்றி முயன்றிட்டால்

எண்ணியது கைகூடும்! இலக்குகளை அடைந்திடலாம்!


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home