Wednesday, March 25, 2026

செங்கோன்மை -- 55

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------

செங்கோன்மை -- 55

--------------------------------------------------------------

வேண்டியவர் வேண்டாதோர் என்றேதான் பார்க்காமல்

நடுநிலைமை கொண்டேதான் பழகுவதே நீதியாகும்!


தேன்மழையை நோக்கித்தான் உயிரினங்கள் வாழுமிங்கே!

நல்லாட்சி நோக்கித்தான் குடிமக்கள் வாழ்கின்றார்!


அறவோரின் நூல்களுக்கும் அறப்பணிகள் நடப்பதற்கும்

துணைநின்று போற்றுவது நல்லரசின் கடமையாகும்!


அன்புடனே மக்களைத்தான் அரவணைக்கும் நல்லாட்சி

பண்புகளைப் பின்பற்றி நாடிங்கே நடைபோடும்!


நீதிநெறி தவறாமல் ஆள்கின்ற நாட்டினிலே

பருவமழை பொய்க்காது! விளைச்சலுக்கும் பஞ்சமில்லை!


நல்லரசின் வெற்றிக்கு அரக்கமன ஆயுதமா?

நெறிமனத்துச் செங்கோலா? செங்கோல்தான்! உணர்ந்திடுவாய்!


மக்களைக் காப்பவன்தான் ஆள்பவனாம்! ஆள்பவனைக்

காப்பதோ அறவழியை மறவாத நீதிநெறியாம்!


நீதிநாடி வருவோரைப் பார்க்காத ஆட்சியாளன்,

ஆராய்ந்து பார்க்காமல் நீதிகளை வழங்குபவன்

பகைவர்கள் இன்றியே தானாக அழிந்திடுவான்!


கண்ணிமையாய் மக்களுக்குப் பாதுகப்பாய் விளங்குவதும்

நடுநிலை போற்றித்தான் தண்டனை வழங்குவதும்

பழியன்று! பாவமன்று! நீதிகாக்கும்கடமையாகும்!


கொடியவர்க்குத் தண்டனை கொடுப்பதெல்லாம், பயிர்காக்க

களைகளை நீக்குகின்ற கடமையைப் போன்றதாகும்!


மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home