ஊக்கம் உடைமை-- 60
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
ஊக்கம் உடைமை-- 60
---------------------------------------------------------------
சவால்களைச் சமாளிக்க ஊக்கம் அவசியம்
----------------------------------------------------------------
உடையவர் என்றாலே ஊக்கத்தைக் கொண்டவர்தான்!
ஊக்கமற்றோர் எவருமே உடையவர் ஆகமாட்டார்!
ஊக்கமே நிலையான செல்வம்! மற்றவை
நிலையற்ற செல்வமாகும்! அழிந்து மறைந்துவிடும்!
செல்வத்தை இழக்கின்ற நிலையிங்கே வந்தாலும்
ஊக்கத்தைக் கொண்டவர்கள் துளிகூட கலங்கமாட்டார்!
ஊக்கமென்னும் பண்புடைய உள்ளத்தை நாடித்தான்
செல்வங்கள் தேடிவந்தே எந்நாளும் உறவாடும்!
தண்ணீரின் உயரந்தான் மலர்த்தண்டின் நீளமாகும்!
ஊக்கத்தின் அளவேதான் மாந்தரின் உயர்வாகும்!
தன்னிலையே தாழ்ந்தாலும் உள்ளத்தில் கூடுகட்டும்
எண்ணங்கள் என்றென்றும் உயர்ந்தவையாய் இருக்கவேண்டும்!
உடல்முழுதும் அம்புகளா? யானையோ தளர்வதில்லை!
ஊக்கத்தைக் கொண்டவரும் நிலைதாழ்ந்தும் தளரமாட்டார்!
ஊக்கமற்ற மாந்தர்கள் கொடைவள்ளல் என்றதொரு
மதிப்பினை இவ்வுலகில் அடைவதோ அரிதாகும்!
மலைக்கவைக்கும் தோற்றத்துடன் யானை இருந்தாலும்
ஊக்கமுடன் தாக்குகின்ற புலிபாய்ந்தால் அஞ்சிநிற்கும்!
ஊக்கந்தான் உயிரோட்டம்! ஊக்கமற்ற மாந்தர்கள்
மனிதஉரு கொண்டிருக்கும் மரங்கள்தான் வேறில்லை!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home