Wednesday, March 25, 2026

கொடுங்கோன்மை---56

 திருக்குறள் மழலைப் பாடல்

-------------------------------------------------------

கொடுங்கோன்மை---56

---------------------------------------------------------

மக்களைத் துன்புறுத்திப் பார்க்கின்ற அரசு

கொலைக்குற்றம் செய்வதைக் காட்டிலும் கொடிது!


மக்களிடம் வம்படியாய்ப் பொருள்கொள்ளும் அரசு

வழிப்பறிக் கள்வருக்கு நிகரென்றே சொல்லு!


நன்மையைத் தீமையை எடைபோட்டுப் பார்த்தே

ஆளவேண்டும் இல்லையேல் தானாகக் கவிழும்!


கொடுங்கோலைக் கட்டவிழ்த்தே ஆள்கின்ற ஆட்சி

பொருளையும் மக்களையும் இழந்தேதான் வீழும்!


கொடுமையிலே துடிக்கின்ற பொதுமக்கள் கண்ணீர்

ஆட்சியையே அழிக்கின்ற வலிமையான ஆயுதம்!


நீதிநெறி தவறாதோர் புகழென்றும் நிலைக்கும்!

அப்பண்பைப் புறக்கணித்தால் புகழ்நிலைத்தல் கடினம்!


மழையின்றிப் போவதாலே உண்டாகும் துன்பம்

கருணையற்ற ஆட்சியிலே மக்கள்நிலை ஆகும்!


முறையற்ற ஆட்சியிலே செல்வந்தன் வாழ்க்கை

வறுமையிலே வாழ்வதையும் விஞ்சுகின்ற துயரம்!


முறைதவறி நடத்துகின்ற ஆட்சிதனைப் பார்த்தாலே

மழைமேகம் அஞ்சியே பெய்யாது ஓடும்!


மக்களைக் காக்காத ஆட்சியிலே பசுவின்

பால்வளங்கள் குறைந்துவிடும்! அறநூலைச் சான்றோர்கள்

மறந்தேதான் வாழ்ந்திருப்பார்! இருள்சூழும் நாடு 


மதுரை பாபாராஜ்.




0 Comments:

Post a Comment

<< Home