Saturday, September 27, 2008

வகை வகையான மனிதர்கள் !

சிரிப்பதற்கு காசு கேட்பார் !

மெல்லிய புன்னகை மட்டுமே சிந்துவார்!
துல்லியமாய் சற்றே அளந்தளந்து --மெல்ல
இதழ்மலர யோசித்துப் பார்த்துச் சிரிப்பை
உதிர்ப்பார் அளவாகத் தான்.

சத்தம்போட்டுச் சிரிப்பார்!

இவர்சிரித்தால் காடே அதிரும்! குலுங்கும்!
இவர்சிரிப்பைக் கேட்டவுடன் இங்கே -- எவரும்
சிரித்திடுவார்! அங்கே சிரிப்பலைகள் வந்து
சொரியவைக்கும் கண்ணீரைத் தான்.


சிரிக்கவே மாட்டார்!

இப்படி அப்படி எப்படிப் பேசினாலும்
உப்பளவு கூட சிரிக்கமாட்டார்!-- அப்படி
என்ன பிறவியோ இப்பிறவி என்றேதான்
நண்பர்கள் கூறிடுவார் பார்.

மலைவிழுங்கி மகாதேவன்!

கல்மழையே பெய்தாலும் இங்கே கலங்காமல்
புல்தரையைப் பார்ப்பதுபோல் பார்த்திருப்பார்!-- எள்ளளவு
பாதிப்பும் இல்லாமல் மாமலைபோல் இத்தகையோர்
ஊதிநிற்பார் சூழ்நிலையைத் தான்.

புறணிப் பாவலர்

எடுத்ததெற் கெல்லாம் நுழைந்து நுழைந்து
கொடுக்காக மாறும் இவரோ --அடுத்தவரைப்
பற்றியே பேசும் புறணியில் காலத்தை
வற்றிவிடச் செய்வார் தனித்து.

சிக்கலிலே சிக்காதவர்

மலைபோன்ற சிக்கல் மடுவாக மாறும்
நிலைஎடுத்தே நிம்மதியாய் வாழ்வார் --உலகமே
கோழை எனச்சொல்லும் !அந்தப் பெருந்தன்மை
கோழைத் தனமல்ல ! கூறு.

சிக்கலுக்கே சிக்கலாவார் !


துரும்புகளைத் தூணாக்கித் துள்ளிக் குதிக்கும்
இரும்புமனங் கொண்டவரும் உண்டு --கரும்பான
உள்ளம் இருந்தும் இவர்சிந்தும் வன்சொற்கள்
உள்ளத்தைப் பாதிக்கும் இங்கு.

நடைமுறை அறியாத கடமை வீரர்கள்!

கடமை! கடமை! இதையன்றி வேறு
நடப்பே அறியாதோர் கூட்டம் -- கடமை
முடிந்தேதான் ஓய்வெடுக்கும் போது உலகின்
நடைமுறையில் தத்தளிப்பார் பார்.

எரிமலை நாயகர்

பணிக்களத்தைப் போர்க்களமாய் மாற்றியே நாளும்
அணிப்பகையை ஏற்படுத்தி வாழ்வார் -- தனிமனித
ஆற்றல் இருந்தாலும் இக்குணத்தால் மற்றவர்கள்
தூற்றி விலகுவார் சொல்.


நடுநிலை நாயகர்

பகைவரா? நண்பரா? பார்க்காமல் இங்கே
அகத்தில் நடுநிலையைப் போற்றி --மகத்தாக
வாழ்ந்தே மறைவோரும் இங்கே வரலாறாய்
வாழ்ந்திருப்பார் என்றென்றும் தான்.

எதெற்கெடுத் தாலும் சிரிப்பார்

எதெற்கெடுத் தாலும் சிரிப்பவரைப் பார்த்தால்
உதறல் எடுக்கும் உடலில் -- பதறி
ஒதுங்குவோம் ! பைத்தியம் என்றே மனத்தில்
பதுங்குவோம் ! எண்ணுவோம்! பார்.

2 Comments:

Blogger யூர்கன் க்ருகியர் said...

கவிதை நல்லாருக்கு சார்.

ஹ ஹ் ஹ ஹ் ஹ ஹா ஹா ஹா ஹா
இது எப்படி இருக்கு?

8:58 AM

 
Blogger Deepa said...

சிரிப்பில் இத்தனை வகை
உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதனை வகையும்
வக்கணையா சொல்லியிருக்கீங்களே.. நீங்க எந்த வகை ??

5:58 AM

 

Post a Comment

<< Home