Friday, June 25, 2010

செம்மொழி மாநாடு

செம்மொழி மாநாடு
மேடைப் போலிகள் திரை விலக்கட்டும்!
============================================
மேடையிலே பேசுகின்றார் செந்தமிழே வாழ்வென்று!
மேடையை விட்டே இறங்கியதும் உள்ளத்தில்
வேடமிட்ட போலித் தனமோ உறுத்திட
வேகமாகச் செல்கின்றார் பார்.

தனிமனிதர் வீடுகளில் ஆங்கில மோகம்
அணிவகுக்க நாள்தோறும் மக்களின் வாழ்வில்
புனிதத் தமிழோ தலைகுனிந்து நிற்க
மனங்கள் கணக்கிறதாம்! ஓ!

எத்தனைப் பேச்சாளர் தங்கள் குழந்தைக்கு
முத்தாய்த் தமிழ்ப்பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார்?
எத்தனைபேர் தங்கள் குழந்தை தமிழ்வழியில்
கற்பதற்குத் தூண்டியவர்?சொல்.

தங்கள் குழந்தைகள் தங்களை ஆங்கிலத்தில்
இங்கழைக்க உள்ளம் மகிழாமல் தாய்த்தமிழில்
என்றும் அழைத்திட வேண்டும் எனும்நிலையை
கொண்டுவந்தோர் எத்தனைபேர்? கூறு.

வீட்டிற்குள் தங்கள் குடும்பத்தை மாற்றாமல்
நாட்டிற்குள் மாற்ற முயல்வதோ?-- ஏட்டுச்
சுரைக்காய் கறிசமைக்க ஆகுமோ? போலித்
திரைவிலக்கி உண்மையாய் வாழ்.

பேசுவதோ ஒன்றாகும்! செய்வதோ ஒன்றாகும்!
கூசாமல் போலி முகத்திரையை ஏந்துவதேன்?
ஊசலாடும் உள்ளமின்றி சொல்பவர்கள் செய்யட்டும்!
தேசமே பின்பற்றும் அன்று.

சொந்தச் செலவில் பொது மக்கள் சென்றனர்!
அந்த உணர்வே தமிழுணர்வு! மற்றவர்கள்
செஞ்சோற்றுக் கடன்தீர்க்கச் சென்றவரே! அல்லாமல்
தன்னல மற்றவரோ? சாற்று.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger agaramamuthan said...

அருமை. அழகாக அத்தகைய மேடைப் பேச்சாளர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளீர்கள். முன்பு நான் ஒருமுறை இப்படி எழுதினேன்.


தாருக்கே தோள்வளர்த்துத் தாய்தமிழ்க்கே என்றுரைப்பார்
பேருக்கே பல்லோர் பிறந்து! -என்று

அதாவது, பிறர் இடுகின்ற மாலைகளைத் தாங்குதவற்காகத் தோள்களை வளர்ப்பவர்கள் தாய்அதாவது, பிறர் இடுகின்ற மாலைகளைத் தாங்குதவற்காகத் தோள்களை வளர்ப்பவர்கள் தமிழைக் காப்பதற்காகவே தாங்கள் தோள்வலி படைத்திருப்பதாகப் பொய்யுரைப்பர். அத்தகையோர் பேருக்காகவே பிறந்தோரன்றி, செந்தமிழின் சீருக்காகப் பிறந்தவரல்லர் என்பது பாடலின் கருத்து.

5:19 AM

 

Post a Comment

<< Home