Monday, July 05, 2010

கடமையின் நிறைவு!

========================
முறுவல் இதழ்களில் எச்சில் வழிய
துறுதுறு வென்றே சுழன்றுத் திரிந்து
நறுஞ்சுவை தாய்ப்பால் அமுதம் பருகும்
சிறுமிப் பருவம், அரும்பு.

தவழ்ந்து தவழ்ந்து விழுந்து விழுந்து
அலறி அழுது தவிக்க வைத்து
மழலை பொழிந்து மனத்தைக் கவர்ந்து
வளரும் பருவம் அடுத்து.

சுவரைப் பிடித்து நடையைப் பழக
தவறிச் சரிந்ததும் அம்மாவைப் பார்த்து
பரபர வென்றே அணைத்துப் பிடித்து
உவக்கும் பருவம் அடுத்து.

ஆடுவாள் ஓடுவாள் தேடியே சென்றதும்
மூடுவாள் கண்களை! தாயோ ஒருகவளஞ்
சோறு தருவதற்குள் சோர்ந்து தடுமாறி
வாடுவாள் அங்கே தளர்ந்து.

துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில்
அள்ளி அரவணைப்பாள்! நாள்தோறும் பாடத்தை
சொல்லித் தருவதில் ஆசானாய் அம்மாதான்
கல்விச் சுனையாவாள் காண்.

பள்ளிக்கு வந்திடுவாள் தன்மைகள் முன்னேற்றம்
எவ்வாறு என்றே கணித்து ரசித்திருப்பாள்!
இவ்வுலகில் தன்மைகள் பட்டப் படிப்புதனை
வெல்வதற்குத் தோள்கொடுப்பாள் இங்கு.

கல்லூரி வாழ்வை முடித்து வெளிவந்தே
அல்லாடி அன்றாடம் வேலைக்குச் சென்றிடும்
முல்லைக் கொடியை மலைத்தே ரசித்திருப்பாள்!
தொல்லை மறப்பாள் மகிழ்ந்து.

மணப்பருவம் வந்ததும் இல்லறத்தை ஏற்க
கணவனைத் தேடும் படலத்தில் வெற்றி
கனிந்ததும் தங்கள் கடமை நிறைவில்
அமர்ந்திருப்பார் பெற்றோர் உவந்து.

0 Comments:

Post a Comment

<< Home