Tuesday, July 27, 2010

கம்பராமாயணக் காட்சிகள்

"கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர்இயன்ற மதிக்கும் உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஓர் தொல்மறு,
ஆரியன்!பிறந்து ஆக்கினையாம் அரோ!"(4135)
====================================================
கருமை நிறத்தில் நிலவுக்கு விண்ணில்
ஒருகளங்கம் உள்ளதால், மண்ணிலே உன்னால்
ஒருகளங்கம் சூரிய வம்சத்தில் ஊன்றும்
கருத்துடன் இந்தப் பழிச்செயலைச் செய்யும்
கருத்துனக்குத் தோன்றியதோ? கூறு.
======================================================

"மற்று ஒருத்தன் வலிந்து அறை கூவ, வந்து
உற்ற என்னை, ஒளித்து, உயிர் உண்ட நீ,
இற்றையில் , பிறர்க்கும் இகல்ஏறு என
நிற்றிபோலும்? கிடந்த நிலத்து அரோ?"(4136)
================================================
என்தம்பி சுக்கிரீவன் தானே வலியவந்து
என்னைத்தான் போருக்கு அழைத்தான்! அதையேற்று
வந்தபோது யாரும் அறியாத வாறிங்கே
என்னை மறைந்திருந்து அம்பெய்து என்னுயுரை
இங்கே கவர்ந்ததற்கு வெட்கப் படவேண்டும்!
மண்ணில் தளர்ந்து விழுந்திருக்கும் நேரத்தில்
கண்ணெதிரே ஏதோ வலிமை பொருந்திய
கண்கவர் ஆண்சிங்கம் செய்தற் கரியசெயல்
ஒன்றினைச் செய்ததைப் போல செருக்குடன்
வந்தேதான் நிற்கின்றாய்! வெட்கமாய் இல்லையா?
என்றே கனன்றுரைத்தான் காண்.
===================================================
"நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும், சீலமும் போற்றலை;
வாலியைப் படுத்தாய் அலை; மண் அற
வேலியைப் படுத்தாய்,விறல் வீரனே!"(4137)
================================================
சாத்திர நூலின் விதிமுறையை,முன்னோர்கள்
காத்த வழக்கத்தை மற்றும் மனுநேறியைப்
போற்றுகின்ற உன்னுடைய நல்லொழுக் கத்தையோ
ஏற்று மதித்து நடக்கவில்லை! உன்மனமோ
ஏதோ தனிமனிதன் வாலியை வென்றதாக
நாடறிய இங்கே இறுமாப்புக் கொள்ளாதே!
நாடுகாக்கும் நல்லரசர் போற்றும் அறநெறிக்குப்
பாடுபட்டுக் கட்டிய வேலியை முற்றிலும்
கூறுபோட்டு, அய்யோ! அடியோ டழித்துவிட்டாய்!
சாடுகிறான் வாலிதான் சாற்று.
====================================================
"தாரம் மற்றொருவன் கொள, தன் கையில்
பார வெஞ்சிலை வீரம் பழுதுற!
நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே?"(4138)
====================================================
உன்மனைவி சீதையை அந்தோ! ஓரரக்கன்
வஞ்சனை செய்தே அபகரித்துச் சென்றுவிட்டான்!
அந்த அரக்கனைப் பின்தொடர்ந்து உன்வில்லால்
வஞ்சகனைக் கொன்றேதான் இல்லாளை மீட்டுவர
இங்கே இயலாத நீயேன் கரத்திலே
தொங்குகின்ற வில்லைச் சுமைபோலத் தாங்குகின்றாய் ?
உன்வீரம் என்றும் பழிப்புக் கிடமாகும்!
என்கையில் ஆயுதமே இல்லாமல் நின்றபோது
என்னுடன் நேருக்கு நேராகப் போரிடாமல்
எங்கோ மறைந்திருந்து மார்பிலே அம்பெய்து
என்னுயிரைக் காவுகொண்டாய்! இத்தகைய வில்வீரம்
எங்கேனும் கண்டதுண்டா? என்றே உலகத்தார்
உன்னைத்தான் போற்றுவரோ?உன்னுடைய வில்வித்தை
தன்னுள் விளைவிக்கும் வல்லமை தானிதுவோ?
என்றே இகழ்ந்துரைத்தான் !பார்.
=================================================
என்று, தானும் எயிறு பொடிபடத்
தின்று, காந்தி,விழிவழித்தீ உக,
அன்று, அவ்வாலி அனையன கூறினான்;
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான்.(4139)
===========================================
பற்கள் பொடியாக, கடித்துச் சினந்தேதான்
உக்கிரமாய்க் கண்களில் தீப்பொறி சிந்திவர
வாலி விடுத்த பழிமொழி அம்புகளை
வேலிஎனும் பண்பாம் பொறுமையுடன் ராமனோ
ஈரமனம் கொண்டேதான் கேட்டுவிட்டுத் தன்பதிலை
சாரமுடன் கூறினான் பார்.
=====================================================

வாலியின் பழிச்சொற்களுக்கு இராமனின் மறுமொழி!(பாடல்:4140--4150)

"பிலம் புக்காய் நெடுநாள் பெயராய்" எனாப்
புலம்புற்று, உன்வழிப் போதலுற்றான் தனை,
குளம் புக்கு ஆன்ற முதியர், "குறிக்கொள் நீ
அலம் பொன் தாரவனே!அரசு" என்றலும்.(4140)
================================================
மாயாவி என்னும் அரக்கன் உனைஎதிர்க்க,
மாயாவி ஓடஓட அங்கே குகைக்குள்ளே
வேழமென பின்சென்று போர்புரிந்தாய் வீரமுடன்!
காலம் இருபத்தெட் டாண்டுகள் சென்றன!
நீவர வில்லையென உன்தம்பி சுக்ரீவன்
தான்சென்று பார்க்க விரும்பிய நேரத்தில்
சான்றோர் தடுத்தனர்! தம்பியும் உட்சென்றால்
தங்களது நாடோ அரசனே இல்லாமல்
நொந்துபோய் தத்தளிக்கும்!போகவேண்டாம்! என்றனர்!
எங்களுக்கு நீதான் அரசனாய் ஆகவேண்டும்!
பங்கமின்றி காக்கவேண்டும்! என்றனர் எல்லோரும்!
இந்தநிலை தோன்றியதே அன்று.
======================================================
"வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையும் இறத் தடிந்து,
யானும் மாள்வென்; இருந்து அரசு ஆள்கிலேன்;
"ஊனம் ஆன உரை பகர்ந்தீர் "என.(4141)
================================================
என்னுடைய அண்ணனைக் கொன்ற அரக்கனையும்
பன்பற்றோன் சுற்றத்தார் எல்லோரும் மாளுகின்ற
வண்ணம்நான் செய்துவிட்டு நானும் இறந்திடுவேன் !
என்னண்ணன் இல்லாமல் நான்மட்டும் வேந்தனாகும்
எண்ணம், பழிச்சொல்லை ஏந்தும் அறிவுரையை
இங்கேன் உரைத்தீர்? எனக்கேட்டே சுக்கிரீவன்
உன்னுயிர்த் தம்பியானான் பார்.
===================================================

"பற்றி ஆன்ற படைத்தலை வீரரும்,
முற்று உணர்ந்த முதியரும்,முன்பரும்,
"இற்றது உம அரசு எய்தலையேல்" என,
கொற்று நன்முடி கொண்டது, இக்கோதிலான்."(4142)
=====================================================
சுக்கிரீவன் ஆள மறுத்தபோது ஆற்றலில்
மிக்கத் தளபதிகள், மற்றும் அமைச்சர்கள்,
மக்களும் உன்பின்னே வந்தே உயிர்விடும்
சுக்கிரீவன் எண்ணத்தை அங்கே தடுத்தேதான்
"இப்போது மன்னன் பொறுப்பைத் தவிர்த்திட்டால்
எப்போதும் இந்நாடு கெட்டழியும்" என்றனர்!
வற்புறுத்தல் தம்பியின் எண்ணத்தை மாற்றியது!
பற்றின்றி அம்மகுடம் தாங்கித்தான் ஆட்சியைக்
குற்றமற ஏற்றான்!நடந்ததே இஃதுதான்!
அக்கறையாய் வாலியே கேள்.
=============================================
"வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்;
"எந்தை!என்கண், இனத்தவர் ஆற்றலால் ,
தந்தது உன் அரசு," என்று,தரிக்கிலான்
முந்தை உற்றது சொல்ல, முனிந்து நீ.(4143)
=========================================================
மாயாவி என்னும் அரக்கனைக் கொன்றுவிட்டு
நேராக நீவந்தாய்! உன்னை வணங்கினான்!
தாய்கண்ட சேய்போல் மகிழ்ந்திருந்தான்! தந்தையைப்
போலான அண்ணனே ! மூத்தவர்கள் வற்புறுத்த
காலத்தால் நானோ உடன்பட வில்லையன்னா!
கோல நிகழ்வைத் தொகுத்தளிக்க முற்பட்டான்!
சாரமின்றி தம்பியின் கூற்றை மறுத்துவிட்டாய்!
வேழம்போல் கோபித்தாய்! என்றே இராமன்தான்
சாரமுடன் சொல்லிநின்றான் அங்கு.
======================================================
"கொல்லல் உற்றனை உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை;
"அல்லல் செய்யேல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல்"; என்னவும், புல்லலை; பொங்கினாய்;"(4144)
====================================================
தம்பியிடம் குற்றமில்லை என்றுணர்ந்த பின்னரும்
அண்ணனான நீயோ இரக்கத்தைக் காட்டாமல்
தம்பியைக் கொல்ல முயற்சித்தாய்; அவனுன்னை
அன்பால் பணிந்து "நானுனக்குத் தஞ்சமென்றும்,
துன்புறுத்த வேண்டாம், எனவணங்கிக் கேட்டபோதும்
வஞ்சினம் கொண்டேதான் பொங்கி எழுந்தாயே,"
என்றான் இராமன் அளந்து.
========================================================
"ஊற்றம் முற்று உடையான்,"உனக்கு ஆர் அமர்
தோற்றும்" என்று தொழுது, உயர் கையனைக்
"கூற்றம் உண்ணக் கொடுப்பென்" என்று எண்ணினாய்;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான்."(4145)
========================================================
சூரியன் மைந்தனாம் சுக்கிரீவன் உன்னையோ
பாரில் எதிர்க்கும் முழுஆற்றல் பெற்றிருந்தும்
"போரில் உடன்பிறப்பை மோதுவது நல்லதல்ல"
நயமுடன் சிந்தித்து "நானும் எனதணியில்
போரிடும் வீரர்கள் எல்லோரும் உன்னிடம்
நேரடியாய்த் தோற்றவர் ஆனோம்" எனக்கூறி
சீலமுடன் தங்கள் கைகளைத் தூக்கியே
ஆர்வமுடன் உன்னைத் தொழுதிருந்தான் என்றாலும்
நீயோ "அவனை இயமன் சுவைக்குமாறு
ஊழியாய் மாறியே கொன்றிடுவேன்" என்றுரைத்தே
ஆவி பறிக்க முனைந்தாய்! பயந்துபோய்
பாரிலுள்ள நான்கு திசைகளின் எல்லைக்கும்
பாய்ந்தே அதற்கப்பால் அஞ்சித்தான் சென்றடைந்தான்!
வாலியே! கேட்டுணர்தல் நன்று.
=========================================================
"அன்னதன்மை அறிந்தும் அருளலை ;
பின்னவன் இவன் என்பதும் பேணலை,"
வன்னி தான் இடும் சாப வரம்புடைப்
பொன் மலைக்கு அவன் நண்ணலின்,போகலை ."(4146)
============================================================
இக்கணமே உன்னிடம் தோற்றேன் எனப்பயந்தே
திக்குகளின் எல்லைவரை ஓடியதைக் கண்டுனர்ந்தும்,
சற்றும் கருணையைக் காட்டவில்லை !உன்னுடன்
ஒட்டுற வாடும் உடன்பிறந்த தம்பியென்றும்
பற்றுவைக்க வில்லை!மதங்க முனிவரின்
சுட்டெரிக்கும் சாபத்தின் எல்லைக்குள் உட்பட்ட
கட்டழகு கொண்ட ருசியமுக பர்வதத்தை
சுக்கிரீவன் சேர்ந்ததால் போரைத் தொடரவில்லை!
சுக்கிரீவன் இன்னும் உயிருடன் வாழ்கின்றான்!
உற்றபதில் சொன்னான் தெளிந்து.
==========================================================
"ஈரம் ஆவதும் , இற்பிறப்பு ஆவதும்,
வீரம் ஆவதும், கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும், மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவதும், தாங்கும் தருக்கு அதோ!"(4147)
===============================================================
பிறரிடம் அன்பைப் பொழிவதும், நல்ல
பிறவி எடுத்துக் குடிப்பயன் கண்டு
சிறப்பதும், வீரத்தைப் பெற்றிருக்கும் பண்பும் ,
அகஇருளை நீக்குகின்ற கல்வியைக் கற்று
மகத்தாக மேம்பட்டு வாழ்வதும் இங்கே
அகவாழ்வில் வேறொருவன் இல்லாளின் கற்பை
அபகரிக்கா வண்ணம் அவளை இமைபோல்
கடமையாய்ப் பாதுகாக்கும் பேராண்மை என்ற
தடம்பதிக்கும் நல்ல நிலைக்களன் விட்டே
தடம்புரண்ட வாலியே! கேள்.
=======================================================
"மறம் திறம்பல் "வலியம்" எனா மனம்
புறம் திறம்ப, எளியவர்ப் பொங்குதல்;
அறம் திறம்பல், அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல்:தெளிவுடையோர்க்கு எலாம்."(4148)
=========================================================
கற்றறிந்தோர், வீரத்தை விட்டு வழுவுதல்
இத்தரணி மீது வலிமை கொண்டவர்
எக்காலும் நானென்ற அந்தச் செருக்கினால்
அற்பமாய் உள்ளத்தில் மாறுபட்டுக் கண்ணெதிரில்
சற்றே வலிமை குறைந்தவரைப் பார்த்தேதான்
புற்றரவம் போல சினம்கொண்டு சீறுதலாம்!
அற்புத அறப்பண்பை விட்டு வழுவுதல்
கற்புநெறி சார்ந்த மகளிரிடம் வன்மனத்தால்
முற்றும் முறைகேடாய் எண்ணி நடப்பதாம்!
நெற்றியடி போலுரைத்தான் நின்று.
================================================================
"தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை;எண்ணினால்,
அருமை உம்பி தன ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை, எய்தப் பெறுதியோ?"(4149)
==================================================
அறப்பண்போ இத்தகைய நற்சிறப்பைக் கொண்ட
சிறப்புகள் கொண்டது என்பதையும் அந்தச்
சிறப்புகளின் இம்மை மறுமைப் பயனை
அகத்திலே சிந்தித்துப் பார்க்கவில்லை! பார்த்தே
எடைபோட் டிருந்தால்நீ உன்தம்பி நாளும்
அகம்போற்றும் நல்ல மனைவியாம் கற்பில்
சிறந்த உருமையை உன்பெருமை எல்லாம்
சிதைந்துபோக அக்குலப் பெண்ணைக் கவர்ந்தே
முறையின்றி உன்னுடைய தாரமாய் ஆகித்
தடம்புரண்டு நிற்பாயோ? சாற்று.

===================================================
"ஆதலாலும், அவன் எனக்கு ஆர் உயிர்க்
காதலான் எனலானும், நிற் கட்டனென்;
ஏதிலாரும் , எளியர் என்றால்,அவர்
தீது தீர்ப்பது, என் சிந்தைக் கருத்து அரோ!"(4150)
=====================================================
இத்தகைய குற்றங்கள் எல்லாம்நீ செய்ததாலும்,
முத்துநிகர் உன்தம்பி சுக்ரீவன் என்னுடைய
உற்ற உயிர்த்தோழன் போன்றவன் ஆதலாலும்,
முற்றும் களைபறிப்ப தைப்போல் உனைக்கொல்லும்
அக்கறை கொண்டேன்! அயலராய் என்னுடன்
எந்தத் தொடர்புகளும் இல்லா திருந்தாலும்
இங்கே வலிமை குறைந்தவராய் வாழ்பவரின்
துன்பத்தை நீக்கி அவர்களைக் காப்பதே
என்கொள்கை என்றான் முடித்து.
===========================================================
வாலியின் மறுமொழி !(4 பாடல்கள்)

"பிழைத்த தன்மை இது " எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது
இழைத்த வாலி,"இயல்பு அல இத்துணை;
விழைத்திறம் தொழில்", என்ன விளம்புவான்.(4151)
=========================================================
உந்தன் அறிவுரைகள் எங்களுக்(கு) ஏற்காது !
எங்கள் மனம்போன போக்கிலே வாழ்கின்றோம்!
எங்கள் இனமுறைகள் அப்படித்தான்! என்றுரைத்தே
தன்கருத்தை வாலிசொன்னான் பார்.
============================================================
"ஐய! நுங்கள் அருங்குலக் கற்பின் அப்
பொய்இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
செய்திலன், எமைத் தேமலர் மேலவன்
எய்தின் எய்தியது ஆக இயற்றினான்."(4152)
================================================================
உங்கள் சமுதாயம் பின்பற்றும் கற்புநெறி
எங்களிடம் இல்லையே! எங்கெங்கே யார்யாரோ
அங்கங்கே அப்படியே இன்புறுவோம்! இப்படித்தான்
எங்களது வாழ்க்கை முறை.
====================================================================
"மணமும் இல்லை மறைநெறி வந்தன;
குணமும் இல்லை குலமுதற்கு ஒத்தன;
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்,
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!"(4153)
========================================================================
வானர வாழ்விலே வேதநெறி இல்லறப்
பூமணம் இல்லை! குலமரபு நற்பண்பின்
பாமணமும் இல்லை! மனம்போன போக்கில்தான்
வானரர் வாழ்கின்றோம் பார்.
==================================================================
"பெற்றி மற்று இது; பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலென்; நீ அது கோடியால்
வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய்!" எனச்
சொற்ற சொல் தகைக்கு உற்றது சொல்லுவான்.(4154)
=========================================================
வெல்ல முடியாத என்னையே வென்றவனே!
நல்ல குலகுனங்கள் இல்லாப் பிறவிநாங்கள்!
அவ்வழியில் சிந்தித்தால் நான்குற்றம் செய்யவில்லை!
உள்ளத்தில் ஏற்றுக்கொள் நீ.
==================================================================

0 Comments:

Post a Comment

<< Home