Sunday, July 25, 2010

கம்பன் கவியே கவி!

வேலூர் கம்பன் கழகம் கவிதைப் போட்டிக்கு அனுப்பியது
================================================================
வால்மீகி காவியத்தை வண்டமிழர் பண்பாட்டின்
நேர்த்தி குறையாமல் நற்றமிழில் - தோய்த்தேதான்
இன்றளவும் என்றும் நிலைக்குமாறு தந்துவக்கும்
கம்பன் கவியே கவி.

சடையப்ப வள்ளலின் ஊக்கத்தால் ஆக்கம்
தடையின்றிக் காவியமாய் மாற -- முறையாக
தன்புலமை ஆற்றலை நன்றியுடன் பாடுகின்ற
கம்பன் கவியே கவி.

பெற்றோரின் ஆணை எதுவெனினும் பிள்ளைகள்
தட்டாமல் ஏற்றேதான் கீழ்ப்படியும் -- அற்புதப்
பண்புகளை நெஞ்சில் இழையோட வைத்திருக்கும்
கம்பன் கவியே கவி.

கணவனைச் சுற்றியே வாழ்வில் நடக்கும்
மனைவியின் மாண்புதனைக் காட்டி -- மனத்திலே
பெண்மையைப் போற்றி வணங்கவைக்கும் பாங்கிலே
கம்பன் கவியே கவி.

பெண்ணாசை கொண்டே இராவணன் கூட்டத்தார்
என்னென்ன போர்முறைக்கு வித்திட்டார் --- பொங்கிவந்த
தன்னலக் கூத்துக்கள் தோல்விக்கே மூலமென்ற
கம்பன் கவியே கவி.

ராமன் நினைத்தால் மணித்துளி போதுமே!
பூமணக்கும் சீதையுடன் சேர்ந்திருப்பான் --- ஆனாலும்
மண்ணில் அவதாரம் வெற்றிபெற வைத்திட்ட
கம்பன் கவியே கவி.



ஆற்றல் இருந்தாலும் நன்னெறியை வாழ்விலே
போற்றாமல் வன்முறையில் சென்றுவிட்டால் -- தூற்றுகின்ற
தண்டனை நிச்சயம் என்பதைக் காட்டுகின்ற
கம்பன் கவியே கவி.


அவையடக்கம், நட்பு, எளிமை, பணிவு
இவையெல்லாம் வாழ்வில் இருந்தால் -- அவனியில்
என்றும் உயர்வுதான் என்றே உணர்த்துகின்ற
கம்பன் கவியே கவி.


காவியப் போக்கின் படைப்புகள் எல்லாமே
சீர்மிகு பின்னலாய் நீக்கமற -- ஆழ்நிலை
அன்பினை உள்ளம் வெளிப்படுத்தத் தூண்டிவிடும்
கம்பன் கவியே கவி.

எண்ணற்ற காவியங்கள் பாரில் இருந்தாலும்
பண்பால், தரத்தால்,கவிதைச் செழுமையால்
கம்பன் படைப்பில் நிமிர்ந்துவிட்டான்! அத்தகைய
கம்பன் கவியே கவி.

1 Comments:

Blogger rajkumar said...

அருமை.
குறிப்பாக

பெண்ணாசை கொண்டே இராவணன் கூட்டத்தார்
என்னென்ன போர்முறைக்கு வித்திட்டார் --- பொங்கிவந்த
தன்னலக் கூத்துக்கள் தோல்விக்கே மூலமென்ற
கம்பன் கவியே கவி.

3:51 AM

 

Post a Comment

<< Home