Monday, July 19, 2010

கம்பராமாயணக் காட்சிகள்

பம்பைக்காட்சிகள்
========================
"களிப்படா மனத்தவன் காணின், கற்பு எனும்
கிளிப்படா மொழியவள் விழியின்கேள் எனத்
துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்" என்று
ஒளிப்படாது ஆயிடை ஒளிக்கும் மீனது.(3821)
==============================================
தங்களைக் கண்டால் கயல்விழி சீதையை
எண்ணி அழுவான் இராமனென்றே மீன்களெல்லாம்
தங்களை நீருக்குள் மூழ்கி மறைத்திருக்கும்
பண்புடைய மீன்களைக் கொண்டது பம்பைஎனும்
தண்ணீர் உறவாடும் பொய்கை!இராமனைப்
புண்படுத்த வில்லை உணர்.
=======================================================
ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்ததாம் என,
ஓர்வுஇல கிளவிகள் ஒன்றோடு ஒப்புஇல,
சோர்வுஇல, விளம்பு புள் துவன்றுகின்றது.(3825)
================================================
மொழிகள் பதினெட்டில் நல்ல புலமைத்
தெளிவற்றோர் கூடிநின்று ஆரவாரம் செய்யும்
ஒலிபோல் பறவைகள் அங்கே எழுப்பும்
ஒலிகளோ பொய்கையின் பக்கமெல்லாம் சுற்றிக்
கலந்ஹ்து நிறைந்து விளங்கின ! அம்மா
கலகலப்பின் உச்சமது பார்.
====================================================
வார் அளித்தழை மாம்பிடி வாயிடைக்
கார் அளிக்கலுழிக் கருங் கைம்மலை
நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன்
பேர் அளிக்குப் பிறந்தஇல் ஆயினான்.(3845)
=============================================
பெண்யானை வாய்க்குள்ளே தண்ணீரை ஆண்யானை
அன்புடனே கொண்டுவந்து ஊட்டுவதைக் கண்டராமன்
தன்மனைவி சீதைக்கு ஊட்ட முடியவில்லை
என்றேங்கி நின்றானே பார்த்து.
==================================================

"மற்று இனி உரைப்பது என்னே?
வானிடை, மண்ணில், உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
தீயரே எனினும் ,உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;
உன்கிளை எனது;என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என்
இன்னுயிர்த் துணைவன் " என்றான்.(3916)
==================================================
விண்ணிலும் மண்ணிலும் உன்னைப் பகைத்தவர்
என்னைப் பகைத்தவராம்! உன்னுடைய நண்பர்கள்
என்னுடைய நண்பர்கள்!தீயோரே ஆனாலும்
நண்பரே! உன்றன் உறவினர்கள் இவ்வுலகில்
என்றன் உறவினர்கள்! என்னுடைய சுற்றமும்
உன்னுடைய சுற்றமே!நீயென் உயிர்நண்பன்!
என்றுரைத்து சுக்கிரீவன் நட்பில் திளைத்தேதான்
சொன்னான் இராமன் மகிழ்ந்து.
============================================================
அயர்வு இல்கேள்வி சால் அறிஞர் வேலைமுன்,
பயில்வுஇல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல்,
குயிலும், மாமணிக் குழுவும்,சோதியால்,
வெயிலும்,வெள்ளி வெண்மதியும் மேம்படா.(3921)
=================================================================
கற்றறிந்தோர் உள்ள அவையிலே, கேள்விஞானம்
கற்காதோர் விற்பன்ன ராகமாட்டார்! அஃதேபோல்
அந்த நிழல்தரு சோலையில் உள்ளாடும்
பொன்னும் நவரத் தினங்களும் வீசுகின்ற
மின்னொளியை சூரியன் பாய்ச்சும் வெயிலொளியும்
தண்ணிலவின் தேனொளியும் விஞ்ச முடியவில்லை!
கம்பனின் கற்பனையைப் பார்.
வாலியின் வலிமை
============================================
மெய்க்கொள் வாலினால், மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழிஅரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ?(3937)
===========================================
தன்னுடைய வாலால் இராவணனை வாலியோ
நன்றாகக் கட்டி இழுத்தபோது ராவணன்
புண்பட்டுச் செல்லா இடமில்லை! ரத்தமோ
சிந்தா இடமில்லை! செப்பு.
==============================================

மராமரத்தின் மகிமை
==========================
நீடு நாள்களும் ,கோள்களும் என்ன, மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ, மலர் எனப் பொலிகின்ற வளத்த;
ஓடு மாச்சுடர் வெண்மதிக்கு , உள் கறுப்பு,உயர்ந்த
கோடு தேய்த்தலின் ,களங்கம் உற்றால் எனும் குறிய.(3974)
===========================================================
ஒன்பதை மூன்றால் பெருக்கிவரின் விண்மீன்கள்
ஒன்பது கோள்கள் எல்லாம் மராமரத்தின்
தொன்மைக் கிளைகளில் பூக்களாய்ப் பூத்தேதான்
வண்ணமலர்க் கோலத்தைக் காட்சியாய்க் காட்டின!
இந்த மராமரக் கொம்புகள் உட்சென்றே
அந்த நிலவை உரசியதால் உண்டான
புண்ணின் தழும்பே சிறுபகுதி மங்கலாய்
வெண்ணிலவில் தோன்றும் கருப்புநிற மாகுமென்றே
கம்பன் உரைக்கின்றான் கேள்.

இராமனின் அம்பு மராமரத்தைத் துளைத்தல்
==============================================
ஏழு மாமரம் உருவி,கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும்,ஊடுபுக்கு,உருவி,பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது , அவ்விராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்,ஒழிவது அன்று இன்னும்.(3984)
=============================================================
இராமன் அனுப்பிய ஓரம்பு ஏழு
மராமரக் கூட்டத்துள் சென்று துளைத்து
மராமரத்தைத் தாண்டின! ஏழின் தொகுப்பில்
வேறொன்றும் இல்லாத காரணத்தால் ராமனிடம்
நேராய்த் திரும்பி அம்பறாத் தூணியில்
வேர்பதித்து நின்றது பார்.

வாலியைக் கொல்லும் வழிவகைகள் பற்றி ஆலோசித்தல்
=========================================================
அவ்விடத்து இராமன் ,"நீ அழைத்து , வாலி ஆனதோர்
வெவ்விடத்தின் வந்து, போர் விளைக்கும் ஏல்வை,வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது;என் கருத்து இது"என்றனன்;
தெவ் அடக்கும் வென்றியானும், "நன்று இது" என்று சிந்தியா.(4049)
================================================================
இருவரும் ஆண்மையுடன் போரிடும் நேரம்
ஒருவரும் என்னை அறியாத வண்ணம்
திரைமறைவில் நானும் மறைவிடத்தில் நின்றே
விரையவைப்பேன் அம்பைத்தான் வாலியை நோக்கி
உரைத்தான் இராமன் உவந்து.

ஆட்சியைக் கைப்பற்றும் அந்த வெறிஎன்ற
கூட்டுக்குள் துள்ளிக் குதித்திருந்த சுக்ரீவன்
போற்றினான் இத்தகைய சூழ்ச்சித் திறனைத்தான் !
ஆற்றல் நகர்ந்தது பார்.

வாலியைத் தாரை தடுத்தல்
=================================
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள்,இடை விலக்கினாள்;
வாயிடைப் புகைவர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.(4061)
================================================
என்னுடன் போர்செய்ய வாலியே! வந்துவிடு
என்றேதான் சுக்ரீவன் அண்டம் குலுங்கிட
அண்ணனை அங்கே அழைத்ததும் வாலியோ
பொங்கிச் சினந்தெழுந்தான் பார்.

ஊழி முடிவிலே உண்டாகும் ஊழித்தீ
கோலத்தில் வாலி வெகுண்டெழுந்தான் போர்செய்ய!
ஆலகால நஞ்சுபோல தோற்றம் உருப்பெற
வாலி புறப்பட்டான் அங்கு.

வாலியைத் தாரை தடுக்க முயற்சித்தாள்!
வாய்பொழிந்த கோபப் புகையினாலும் கண்களில்
தீய்ந்துவந்த கோபத் தீயினாலும் தாரையின்
கார்குழல் தீய்ந்தது பார்.

சுக்ரீவனுக்குத் துணை கிடைத்திருக்கிறது
என்று தாரை கூறுதல்
============================================
"கொற்றவ! நின் பெரும் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன் முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந்திறல்; பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது, நெடுந்துணை உடைமையால் "என்றாள்.(4063)
=======================================================
என்றென்றும் வெற்றி உனக்குத்தான் என்றறிந்தும்
உன்தம்பி போருக் கழைக்கின்றான் இங்கென்றால்
உன்னையும் வெல்லும் பெருந்துணை பெற்றுவிட்டான்
என்றுரைத்தே எச்சரித்தாள் மாது.

வாலியின் ஆற்றல்
=======================
"பெயர்வுற வலிக்கவும் , மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி,யான்,அது
தயிர் எனக் கடைந்து, அவர்க்கு அமுதம் தந்தது,
மயில் இயல் குயில் மொழி! மறக்கல் ஆவதோ?"(4066)
=======================================================
பாற்கடலில் மத்து தடுமாறிச் சுழன்றபோது
ஆற்றலற்ற தன்மையில் தேவர் அசுரர்கள்
ஊக்கமின்றி பார்த்துத் திகைத்தேதான் நின்றனர்!
ஊக்கமுடன் நான்வாங்கி பாற்கடலைக் கிண்டியே
ஆக்கமுடன் அங்கே அமுதத்தைத் தந்திருந்தேன்!
ஆற்றலை நீயோ உலகோ மறுப்பீரோ?
தோற்பது என்பதை வாலி வரலாற்றில்
காட்ட முடியுமா? சொல்.

"பேதையர் எதிர்குவர் எனினும்,பெற்றுடை
ஊதிய வரங்களும், உரமும்,உள்ளதில்
பாதியும் என்னதால்; பகைப்பது எங்கனம்?
நீ துயர் ஒழிக!" என நின்று கூறினான்.(4068)
===============================================

என்னுடன் போரிட வந்தால் வருவோரின்
உண்மையான ஆற்றலில் பாதிஇங்கே என்னிடத்தில்
வந்துசேரும் என்ற சிவவரம் உள்ளது!
பண்பரசி! வாடவேண்டாம்!உன்கவலை தேவையில்லை !
வென்று வருவேன்! எனக்கூறி தாரைக்கு
அன்புரை சொன்னான் நிமிர்ந்து.
=======================================================
தாரை, " இராமன் சுக்ரீவனுக்குத் துணை" எனல்
===============================================
அன்னது கேட்டவள்,"அரச! ஆயவற்கு
இன்னுயிர் நட்பு அமைந்து, இராமன் என்பவன்
உன்னுயிர் கோடற்கு உடன் வந்தான்" எனத்
துன்னிய அன்பினர் சொல்லினார்" என்றாள்.(4069)
=================================================
உன்னுயிரை மாய்க்க இராமனை உன்தம்பி
தன்துணையாய்ப் பெற்றிருக்கும் செய்தியினைக் கூறினார்கள்!
என்றேதான் எச்சரித்தாள் வாலியை தாரைதான்!
அன்பின் உயிர்த்துடிப்பைப் பார்.

வாலி இராமனின் நற்பண்புகளை எடுத்துரைத்தல்
(4070 --- 4074)
==============================================
ராமனின் நற்பண்பை எல்லாம் தொகுத்துரைத்தான்!
ராமனா சுக்ரீவனின் கூட்டணியில் சேர்ந்திடுவான்?
பூமகளே! யாரோ தவறாக உன்னிடத்தில்
ஈனமனங் கொண்டே உரைத்திருப்பார்! பண்பாளன்
ஊனமனங் கொண்டே அம்பினை என்மீது
வீணாய்த் தொடுக்கமாட்டான்! என்றே உரைத்திருந்தான்!
மானவள் நொந்தாள் ! துடித்து.
====================================================
வாலி -- சுக்ரீவன் போர் வர்ணனை
==========================================
உரத்தினால் மடுத்து உந்துவர்;பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசித்து எற்றுவர்;கடிப்பர்;நின்று இடிப்பர் ;
மரத்தினால் அடித்து உரப்புவர்;பொருப்பு இனம் வாங்கிச்
சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர்;தெழிப்பர்;தீ விழிப்பர்.(4094)
=================================================================

மார்பினால் தாக்குவர்;கால்களால் தாக்குவர்;
வீரக் கைகளால் தாக்குவர்;பற்களை
தாகம் பெருகக் கடித்திருப்பர்;அவ்விருவர்
வேகமாய் நேருக்கு நேராக மோதிடுவர்;
வேருடன் மாமரத்தைத் தூக்கி அடித்திடுவர்;
பார்ப்போர் நடுங்க மலைகளைத் தூக்கித்தான்
ஆர்த்தெழுந்தே அங்கே எறிந்திடுவர்;தீப்பொறி
சீறிப் பறப்பதுபோல் நோக்குவர்;தாக்குவர்!
போரிட்ட கோலமிது பார்.
=====================================================

சுக்ரீவன் ராமனிடம் ஓடிவருதல்
=====================================
மலைந்த போது இனைந்து, இரவிசேய்,ஐயன் மாட்டு அணுகி,
உலைந்த சிந்தையோடு உணங்கினன்,வணங்கிட ,"உள்ளம்
குலைந்திடேல்; உமை வேற்றுமை தெரிந்திலம்;கொடிப்பூ
மிலைந்து செல்க " என விடுத்தனன்;எதிர்த்தனன் மீட்டும்.(4100)
=================================================================
தாக்குப் பிடிக்க முடியாமல் சுக்ரீவன்
ஏக்கமுடன் ராமனிடம் ஓடிவந்தான்! ராமனோ
காக்கின்றேன்!உங்களுக்குள் வேறுபாடு காண்பதில்
தோற்பதால் நீயோ கொடிப்பூ சூடிக்கொள்!
காற்றெனப் போரிட வாலியிடம் செல்லென்றான் !
கூற்றென ஓடினான் பார்.

இராமபாணம் வாலியின் மார்பைத் துளைத்தல்
(4102-4103-4105)
==================================================
சுக்ரீவன் மீண்டும் வருவதைக் கண்ணுற்றான் !
சுக்ரீவன் தொய்ந்து விழுமாறு வாலியோ
சுற்றி உயிர்த்தலங்கள் உள்ள இடத்திலெல்லாம்
குத்தினான்!ஓங்கி அடித்தான்!உதைத்திருந்தான்!
தத்தளித்து மூச்சுவாங்க சுக்ரீவன் ராமனை
உற்றுநோக்கி காத்தருள கண்களால் தூதுவிட்டான்!
பற்றி எடுத்தேதான் வாலி உயரத்தில்
உக்கிரமாய்த் தூக்கி நெருக்கினான்!மண்தரையில்
நச்சென்று மொத நினைத்தான்! அந்தநேரம்
சற்று மறைந்திருந்த ராமனோ அம்பினை
விட்டான்!விரைந்தது! வாலியின் மார்பினுள்
நற்கனி வாழைப் பழந்தன்னில் ஊசியொன்று
அப்படியே மென்மையாய் ஊடுருவிச் செல்வதுபோல்
பற்றி நுழைந்தது பார்.

வாலியின் கை நெகிழ்தல்
==========================
சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்து,
வையம் மீதிடைக் கிடந்த, போர் அடு திறல் வாலி,
வெய்யவன் தரு மதலையை, மிடல் கொடு கவரும்
கைநெகிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன் கடுங்கணை கவர்தல் .(4107)
=============================================================
ராமபாணம் மார்பைத் துளைத்தவுடன் வாலியோ
வானளாவும் மேனியுள்ள தம்பியைப் பற்றிநின்ற
தூண்போன்ற தன்கைப் பிடிநெகிழ அம்பினைப்
பாங்குடன் பற்றி உள்ளே புகாவண்ணம்
தான்தடுத்து அங்கே நிறுத்தியே வீழ்ந்திருந்தான்!
வான்புகழ் வீரனானான் பார்
============================================================
அம்பின் தன்மை பற்றி எண்ணுதல்
=======================================
"நேமிதான் கொலோ?நீலகண்டன் நெடுஞ்சூல
ஆமிது ஆம் கொலோ?அன்று எனின், குன்று உருவு அயிலும்,
நாம இந்திரன் வச்சிரப்படையும் ,என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ?யாது?,"எனப் புழுங்கும்.(4112)
===============================================================
திருமாலின் சக்கர ஆயுதமோ?இல்லை
திருநீல கண்டனின் சூலமோ?அன்றிக்
கிரௌஞ்ச மாமலையைத் தாக்க முருகன்
கரமெய்த வேற்படையோ?குன்றின் சிறகை
தரையில் அறுத்தெறிய இந்திரன் வீசி
நிலைகுலைய வைத்த வச்சிரமோ?உள்ளம்
கலங்கத் தவித்திருந்தான் காண்.

வாலி அம்பினை நோக்குதல்
==================================
பறித்த வாளியைப் பருவலித் தடக்கையால் பற்றி,
"இறுப்பென்" என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன்;
"முறிப்பென் என்னிலும் , முறிவது அன்றாம்"என மொழியா,
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன்.(4118)
---------------------------------------------------------------------------------------------------------
வாலி பெயர்த்தெடுத்தான் அம்பினை!தன்னுடைய
வேழ வலிமைகொண்ட புண்கைகளால் பற்றினான்!
ஆழப் பதிந்திருந்த அம்பை முறிப்பதற்கோ
தாழ மறுக்கிறது!என்னால் முடியவில்லை!
தூயதோர் ஆற்றல் படைத்த கணைமீது
வேரென ஊன்றிப் பொறித்த பெயரைத்தான்
ஊரறிய பார்க்க விரும்பியே நோக்கினான்!
பார்புகழ வாழ்ந்தவன்தான் பார்.
--------------------------------------------------------------

அம்பில் இராமநாமத்தைக் காணுதல்
=======================================
மும்மைசால் உலகுக்கெல்லாம் , மூலமந்திரத்தை,முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்.(4119)
================================================================
மூவுலகில் வாழ்வோர்க்கும் தன்னை வணங்குவோர்க்கும்
காருண்ய நாயகனாய்த் தன்னை அர்ப்பணிக்கும்
நேயத்தைக் கொண்டவனும், ஏழு பிறவிக்கும்
நோயகற்றும் மாமருந்தாய் உள்ளவனும் ராமன்தான்!
தாய்க்குநிகர் ராமனின் நாமத்தை அவ்வம்பு
ஓவியமாய் ஏந்திநின்ற கோலத்தைக் கண்ணுற்றான்!
வாலிதான் பார்த்திருந்தான் பார்.

இராமன் செயல்குறித்து வாலி நாணுதலும்,வருந்துதலும்
===========================================================
" இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன், தோன்றலால், வேத நல்நூல்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும்,தொல்லை
நல்லறம் துறந்தது" என்னா, நகைவர நாண் உட்கொண்டான்.(4120)
==================================================================
அன்னையின் அன்பிற்கும் தந்தையின் வாய்மைக்கும்
உண்மை உருகொடுக்க இல்லறத்தை விட்டேகி
புண்படுத்தும் காட்டிற்குள் வாழ்வதற்குச் சென்றுவிட்ட
பொன்மான ராமனோ சூரிய வம்சத்தார்
தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த அறநெறி
தன்னை வழுவவிட்ட பாங்கினை எண்ணினான்!
தன்னுள்ளே எள்ளல் சிரிப்புவந்த போதிலும்
நொந்துபோய் வெட்கினான் அங்கு.
==============================================================
வாலி துயர நிலை
===================================
வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும்;" இதுவும் தான் ஓர் ஓங்கு அறமோ?" என்று உன்னும்;
முள்கிடும் குழியில் புக்க மூரிவெம் களிநல்யானை
தொள் கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்துசோர்வான்.(4121)
==================================================================
இதுவும் ஒருவகை யுத்த தருமம்!
வெறுப்புடன் இக்கருத்தைச் சொல்லி முணங்கி
நடுங்கவைக்கும் வேழமொன்று கண்ணி வலையில்
கறுமேனி சிக்கிய கோலத்தில் ரத்தம்
மிகுதியாய் ஓடுகின்ற சேற்றில் கிடந்தான்!
படுத்ததால் சோர்ந்தான் தளர்ந்து.
===================================================================
வாலியின் முன் இராமன் தோன்றுதல்
===========================================
"இறை திறம்பினனால்; என்னே இழிந்துளோர்இயற்கை?என்னில்
முறை திறம்பினனால்"என்று, மொழிகின்ற முகத்தான் முன்னர் ,
மறைதிறம்பாத வாய்மை மன்னர்க்கு,முன்னம் சொன்ன
துறைதிறம்பாமல் காக்கத் தோன்றினான்,வந்து தோன்ற.(4122)
==================================================================
பண்பாளன் ராமனே இங்கே நெறிபிறழ்ந்தால்
எங்களைப் போன்ற குரங்கினத்தார் பண்புகள்
என்னாகும்? என்றே வருத்தமுகம் கொண்டிருக்கும்
புண்பட்ட வாலியின்முன் ராமனோ வந்துநின்றான்!
தன்னகச் சீற்றத்தை வாலியோ கேள்விகளாய்
பொங்கிவரக் கேட்கின்றான் பார்.
==============================================

வாலி இராமனை இகழ்ந்து பேசுதல்
(பாடல்கள் 4123--4139)

கண்ணுற்றான் வாலி, நீலக்கார் முகில், கமலம் பூத்து,
மண்ணுற்று, வரிவில் ஏந்தி , வருவதேபோலும் மாலை;
புண்ணுற்றது அனைய சோரிப் பொறியொடும் பொடிப்ப,நோக்கி,
"எண் உற்றாய் என்செய்தாய்?" என்று, ஏசுவான் இயம்பறுற்றான்.(4123)
=====================================================================
கருமேகம் தாமரைப் பூக்களால் பூத்து
கரங்களில் கட்டமைந்த வில்லேந்தி வந்தே
உலகிலே நிற்பதுபோல் தன்னெதிரே வந்த
அவதார ராமனைக் கண்களால் உற்றுக்
கனன்றேதான் பார்த்தே "அனைவ ரிடத்தும்
மனங்களில் வாழ்பவனே! என்ன நினைத்தாய்?
மனங்கவர் ராமனே!என்னசெய் கின்றாய்?"
மனங்கலங்கி சொற்கள் இகழ்ச்சியாய்த் துள்ள
வினவினான் வாலி துவண்டு.
===============================================================
"வாய்மையும் , மரபும் காத்து,மன்உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே?
தீமைதான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்று ஆமோ?
தாய்மையும் அன்றி நட்பும், தருமமும் தழுவி நின்றாய்!"(4124)
=============================================================
பண்புத் திலகம் தசரதனின் ராமனே!
மண்ணுலகில் தீமையைத் தான்மட்டும் செய்யாமல்
அன்புடன் மற்றவரும் தீமையை விட்டுவிட்டு
என்றும் விலக்கிநிற்க, நீயின்று தீமையைத்
தனலத்தால் செய்துவிட்டால் அத்தீமை தீங்கின்றி
நன்மையைச் செய்ததாய் மாறிடுமோ?" மன்னனே!
உன்பதிலை என்னிடத்தில் கூறு.
==================================================================
"குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னதன்றோ?
வளம் இது; இவ்வுலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால்,திண்மை
அலமரச் செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?"((4125)
=====================================================================
பிறப்பால் உயர்ந்தோன் ; படிப்பால் உயர்ந்தோன்;
மகத்தான வெற்றிகளோ ஏராளம் கொண்டோன்;
சுடரொளி வீசும் உலகின் தலைவன்;
புடம்போட்ட தாய்மைக் குணங்களுடன் காக்கும்
அகம்கொண்ட சான்றோன்! இத்தகைய பண்பை
அகம்புறம் ஏந்தும் சிறப்புகளை எல்லாம்
மறந்துவிட்ட பாங்கில் மறைந்திருந்து அம்பை
அறத்திற்கு மாறாய் தொடுத்த செயலால்
தடம்புரண்ட காரணத்தால் நாங்களோ உன்மேல்
படரவைத்த நம்பிக்கை வேரிழந்து போக
தடமமைத்து இன்று நிலைகுலையச் செய்தே
கசந்கவைத்தாய் நீதிக் கொடியைத்தான் ! அய்யோ!
இடறுதே உன்மதிப்பு! இங்கு.
====================================================
"கோஇயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்,
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பிள்ளை, திகைத்தனை போலும் செய்கை?"(4126)
==================================================================
சித்திரம்போல் பேரழகு கொண்டிருக்கும் ராமா!
இத்தரணி மெச்சும் அரசியல் நீதியும்
முத்தான பேரறமும் உங்கள் குலத்திலே
சுற்றமுடன் வழ்ந்தோர்க் குரிமை யுடையது!
குற்றமற்ற மன்னன் சனகன் குலமகளாம் ,
வெற்றியுடன் பாற்கடலில் பெற்ற அமிழ்துடன்
அற்புதமாய் வந்த திருமகளாம் சீதையை,
உற்றதுணை உந்தன் மனைவியாம் சீதையை
இக்கணம் நீயோ பிரிந்துவிட்டாய்! அத்துயரில்
இக்களத்தில் என்னதான் செய்கின்றோம் என்றுநீ
சற்றும் உணராமல் சிந்தை தடுமாற
கற்றவனே மாறிவிட்டாய்! நீ.
============================================================
"அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல்,அதற்கு வேறோர்
குரங்கினத்து அரசைக் கொல்ல, மனுநெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீபூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்?" (4127)
===============================================================
அரக்கர் இனம்சார்ந்த ராவணன் உந்தன்
அழகு மனைவியாம் சீதையை அன்று
வரம்பினை மீறி அபகரித்துச் சென்றான்!
துயரத்தில் உன்னைக் கலங்கிட வைத்தான்!
அதற்காக அந்தச் செயலில் துளியும்
தொடர்பில்லா என்னைநீ கொல்வது இங்கே
தகாத செயல்தான்! மனுநீதி இந்தக்
கபடத்தைச் செய்வதற்குச் சொல்கிறதா? சொல்லு!
தவறுக்குக் காரணம் அய்யா! ஒருவன்!
தவறே புரியா ஒருவனுக்கு உங்கள்
மனுநீதி தண்டனை தன்னைத் தருமோ?
அருளை இரக்கத்தை எங்கே புதைத்தாய்?
கரும்புள்ளி கொண்டதுன் பண்பு.
===============================================
"ஒலிகடல் உலகம் தன்னில், ஊர்தரும் குரங்கின் மாடே
கலியது காலம் வந்து பரந்ததோ? கருணை வள்ளால்!
மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம்தானும்?
வலியவர் மெலிவு செய்தால், புகழன்றி, வசையின்றாமோ?"(4128)
===================================================================
மரம்விட்டு நாளும் மரம்தாவி வாழும்
குரங்குகள் மட்டுமே தீமை புரியும்
கலிகாலம் வந்ததோ? நன்னடத்தை மற்றும்
ஒழுக்கத்தை என்றும் மெலியவர்கள் மட்டும்
கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளோ?வாழ்வில்
இவைகள் வலியார்,மெலியார்கள் என்ற
இருவகை மாந்தர்க்கும் என்றென்றும் நாளும்
புவியில் பொதுவான பண்புகள் தானே!
வலிமை உடையோர் மெலியோரை வாட்டி
களித்திட்டால் அந்த வலியோரை நோக்கி
பழிகளே வாராதோ?என்னசெய்த போதும்
குவியுமோ இங்கே புகழ்மகுடம்? செப்பு!
புவிவணங்கும் ராமா! புகல்..
=============================================

"கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு இவ்வரசை நல்கி
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன் மேல் உண்டோ?"(4129)
========================================================================
உனக்குரிய நல்லரசை தம்பி பரதன்
மனதார ஆள்வதற்குத் தந்துவிட்டு, இந்த
வனப்பகுதி கிட்கிந்தை காட்டுக்கு வந்தாய்!
மனங்குளிர நீயோ அயோத்தி அரசை
குணக்குன்று தம்பிக்குத் தந்தாய்! சரிதான்!
எனக்குரிய கிட்கிந்தை நாட்டரசை நீயோ
எனைக்கொன்ற பின்பெந்தன் தம்பிக்கு ஈயும்
மனத்தால் நடைமுறைக்கு மாறாக நீயோ
வனத்தில் புதுமையான ஒன்றைப் புரிந்தாய்!
மனங்கவர் ராமனே! உன்னைவிடச் சான்றோன்
இனத்திலே வேறுயார் உள்ளார்? இந்தக்
குணச்செயலைக் காட்டிலும் மேம்பட்ட வேறு
குணச்செயல்தான் உண்டோ? எனக்கேட்டு வாலி
மனத்தால் இகழ்கின்றான் அங்கு.
========================================================
"அறைகழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது, ஆண்மைத்
துறையெனல் ஆயிற்று அன்றே? "தொன்மையின் நன்நூற்கு எல்லாம்,
இறைவன் நீ; என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறையல்ல செய்தான்"என்று, முனிதியோ? முனிவுஇலாதாய்!"(4130)
==================================================================
என்மேல், மறைந்திருந்து அம்பைத் தொடுத்ததால்
முன்னோர் வழியாம் அறவழியை விட்டேதான்
இன்று வழுவிவிட்டாய்! நீயோ இராவணன்
மண்ணகத்தில் ஏதோ அறத்தைப் புறந்தள்ளி
நன்னெறியை நீதியையே மீறிவிட்டான் என்றேதான்
வஞ்சினம் கொள்ளத் தகுதி உனக்குண்டோ?
என்றேதான் ஏசுகின்றான் வாலி சினந்தேதான்!
தன்னிலை கூறினான் சாற்று.
====================================================================
"இருவர் போர் எதிரும் காலை, இருவரும் நல் உற்றாரே ;
ஒருவர் மேல் கருணை தூண்டி, ஒருவர் மேல் ஒளித்து நின்று,
வரிசிலை குழைய வாங்கி,வாய் அம்பு மருமத்து எய்தல் ,
தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம்."(4131)
==================================================================
ஒருவர்க் கொருவர் எதிர்த்துக் களப்போர்
புரிந்திடும் நேரத்தில் மூன்றாம் நபரோ
இருவரையும் நல்ல உறவினராய் எண்ணிக்
கருதுதல் வேண்டும்! அதைவிடுத்து அங்கே
ஒருவர்மேல் நட்பைப் பொழிந்தும் மற்றும்
ஒருவர்மேல் வன்பகை கொண்டு மறைந்து
வளைவில்லில் நாணேற்றிக் கொல்லும் செயலோ
தருமமா? அன்றி அதர்மமா? அய்யா!
கரும்புள்ளி ஏந்தும் நடுநிலை யற்ற
ஒருசெயல் என்பது மட்டும் உறுதி!
சுருக்கென்று சாடினான் பார்.
==============================================
"வீரம் அன்று;விதி அன்று;மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரமன்று; பகையன்று; பண்பு அழிந்து,
ஈரம் இன்றி இது என்செய்தவாறு நீ?"(4132)
================================================
உன்செயல் வீரச் செயலல்ல ராமனே!
என்னுடன் நேருக்கு நேரிங்கே போர்செய்யும்
எண்ணமின்றி இங்கே மறைந்திருந்தே அம்பெய்தாய்!
உன்றன் மனுமகான் நூலில் எழுதிய
நன்னெறிச் சட்டம் இதுவல்ல! இக்களத்தின்
மண்ணிலே யாரோ இவருக்குப் போர்நடக்க
மன்னவனே! மூன்றாம் மனிதனாக நீயிங்கே
எங்கள் பகையில் தலையிட்டாய்! இச்செயல்
உண்மையின் பாற்பட்ட தில்லை! எந்தவித
நன்னெறிக் காரணமும் இன்றி எனைவதைத்தாய்!
உங்கள் குலத்துக் குரிமையான பூமிக்கோ
என்றன் சிறிய உடல் ஒன்றும் சுமையல்ல!
முன்பகை என்றும் நமக்குள் கிடையாது!
நெஞ்சில் இரக்கமின்றி இவ்வாறு செய்துவிட்டாய்!
இந்தச் செயலைநீ ஏன்செய்தாய் என்பதுதான்
இன்னும் எனக்குப் புரியவில்லை! என்றேதான்
தன்கருத்தை வாலிசொன்னான் அங்கு.
================================================

"இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற
பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு
ஒருமை நோக்கி, ஒருவற்கு உதவளோ?"(4133)
===================================================
தன்னிடம் வந்த இருவரிடம் உள்ளாடும்
நன்மையைத் தீமையை நன்றாய் எடைபோட்டு
என்றும் நடுநிலைமை நின்று நிலைத்திட
தன்தீர்ப்பைச் சொல்லுதல் நல்லறமாம்! அவ்வாறு
இங்கே நடக்காமல் நீயின்று செய்ததுபோல்
நெஞ்சிலே குற்றத்தை ஏற்றே ஒருபக்கம்
தன்மனம் ஏற்ற ஒருவருக்கு மட்டுமே
தன்னுதவி செய்தல் அறம்காத்தல் ஆகுமா?
மண்ணில் இதுதான் நியாயமோ என்றேதான்
தன்சொல்லால் சாடுகின்றான்! சாற்று.
================================================
"செயலைச் சேற்ற பகை தெறுவான் தெரிந்து,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின் ,
புயலைப் பற்றும் அப்பொங்கு அரி போக்கி, ஓர்
முயலைப் பற்றுவது , என்ன முயற்சியோ?".(4134)
=================================================
உன்னுடைய காவலுக்குத் தீமையைச் செய்துவிட்டு
உன்மனைவி அன்புமனச் சீதையைத் தன்னிடத்தில்
கொண்டுபோய் அங்கே சிறைவைத்த ராவணனைக்
கண்முன் அழிக்கக் கருதிய நீயிங்கே
நன்றாக ஆராய்ந்து மேகத்தைத் தாவித்தான்
தன்பிடியால் பற்றுகின்ற கோபம் அலைகளாய்ப்
பொங்கிவரும் ஆண்சிங்கம் தன்னையே தேர்ந்தெடுத்து
உன்னுடைய கூட்டணியில் சேர்க்காமல்,என்றென்றும்
அஞ்சி நடுங்கும் முயலைத் துணையாக
இங்குநீ சேர்த்தாயே ! என்ன முயற்சியிது?
இந்த முயற்சியால் தோன்றுகின்ற நன்மையென்ன?
இந்த முயற்சி பயனற்ற ஒன்றாகும்!
தன்கருத்தைச் சொன்னான் துணிந்து.
=========================================================

0 Comments:

Post a Comment

<< Home