Wednesday, February 23, 2011

இல்லறப் பத்து!

====================================
1.விருந்தோம்பல்
===================
விருந்தினர் வந்து கலந்துற வாடி
பெருமிதம் கொள்வதோ அந்தவீட்டின் ஆண்பெண்
விருந்தோம்பல் பண்பின் சிறப்பினால் தானே !
விருந்தோம்பல் இல்லறத்தின் வேர்.
-----------------------------------------------------------------------------------
2.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
=====================================
விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கைக்
கற்றுக் கொடுக்கும் இல்லறத்தைப் போற்றுங்கள்!
குற்றம் குறைகளை ஊதிப் பெரிதாக்கும்
குற்றத்தைச் செய்யாமல் வாழ்.
-------------------------------------------------------------------------------------
3.இணக்கமுடன் வாழ்க
====================
கணவன் மனைவி கருத்தொரு மித்தே
இணக்கமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் என்றும்!
பிணக்கத்தை ஊடுருவ விட்டால் ஐயோ!
அணைத்துவிடும் நிம்மதியைத் தான்.
-------------------------------------------------------------------------------------
4.இருபாலரும் சமம்.
===================
மகனோ மகளோ சமமாய்க் கருது!
உகந்த உரிமைகளை நாளும் வழங்கி
அகத்திலே பேதமின்றி கல்வியைத் தந்தால்
அகங்குளிர வாழ்வார் வளர்ந்து.
-------------------------------------------------------------------------------------
5.பண்புகளை ஊட்டுங்கள்
======================
நல்லநல்ல பண்புகளை நாள்தோறும் ஊட்டுங்கள்!
நல்லவராய் வல்லவராய் வாழ வழிவகுத்து
எல்லோரும் போற்றிடவே ஏற்றமுறச் செய்யுங்கள்!
எல்லைக்குள் வாழப் பழக்கு.
-------------------------------------------------------------------------------------
6.குழந்தைகளின் கடமை
===========================
பெற்றோர் இமையாகிப் பிள்ளைகளைக் காப்பதுபோல்
பெற்றோரை இங்கே குழந்தைகள் நாள்தோறும்
உற்றதுணை யாகியே நன்றி மறவாமல்
பெற்றோரைக் காக்கவேண்டும் பார்.
-------------------------------------------------------------------------------------
7.பெரியவர்களின் ஆசிகள்
=======================
அன்புடன் பண்பும் பணிவும் ஒழுக்கமும்
உண்மையும் நேர்மையும் ஒன்றிக் கலந்திட
என்றும் பெரியவர்கள் ஆசியுடன் இல்லறம்
மங்கலமாய் வாழவேண்டும் பார்.
-------------------------------------------------------------------------------------
8.சுற்றத்தார் வாழ்த்து
=====================
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்றேதான்
சுற்றம் தழைத்திட நாளும் பழகவேண்டும்!
அக்கறை காட்டி அனைவரின் வாழ்த்தையும்
பெற்றேதான் வாழ்தல் சிறப்பு.
-------------------------------------------------------------------------------------
9.விலக்கவேண்டியவை
================= ========
கோபம்,பொறாமை,சிடுசிடுப்பு ஆகியவற்றை
வேகமாய்க் காட்டிப் பழகினால் பெற்றெடுத்த
ஈடற்ற பிள்ளைகளும் இங்கே வெறுத்திடுவார்!
கோடரியாய் மாறாமல் வாழ்.
-------------------------------------------------------------------------------------
10.பெற்றோரே வழிகாட்டிகள்
===========================
அம்மாவும் அப்பாவும் தென்றல்போல் பழகவேண்டும்!
அஞ்சாமல் பிள்ளைகள் தேடிவந்து பேசவேண்டும்!
கண்டிப்பின் எல்லையைப் பெற்றோர் உணரவேண்டும்!
அன்பும் அரவணைப்பும் பிள்ளைகள் நேர்வழியில்
பண்புடன் வாழவைக்கும் பார்.
------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home