Friday, May 06, 2011

வலியின் துளிகள்!

=========================
ஒட்டுக்கள் போட முயற்சித்தேன்! போட்டபோது
ஒட்டுக்கள் அங்கங்கே நாளும் பிரிந்தனவே!
ஒற்றுமையின் கோலம் சிதைகின்ற காட்சியில்
தத்தெடுத்தேன் ஏக்கத்தை! சாற்று.

இந்தப் பிறவியில் நான்செய்யும் குற்றமென்ன?
முந்தைப் பிறவியில் நான்செய்த பாவமென்ன?
செந்தமிழே! வேதனைத் தீயில் கருகுகின்றேன்!
நொந்து சரிகின்றேன் நான்.

என்றோ நடந்ததை என்றும் பகையாக்கி
வம்புகளைத் துள்ளவைத்துப் பார்ப்பது தேவையா?
துன்புறுத்தும் இந்த மனநிலையை விட்டுவிட்டு
என்றும் பெருந்தன்மை ஏந்து.

பகைவரே வந்தாலும் இன்முகம் காட்டும்
நடைமுறை கொண்டதே இல்லற வாழ்க்கை!
பகைமுகம் காட்டுதல் நற்பண்பா? அன்பே!
பகைவரையும் நண்பராகப் பார்.

தினமும் மன உளைச்சல் தாக்குகின்ற கோலம்!
மனமோ துடித்துத் துடித்துக் களைத்தே
வனவாசம் மேற்கொள்ளத் தூண்டுதடா என்னை!
மனவிரக்தி கோலத்தில் நான்.

0 Comments:

Post a Comment

<< Home