Friday, June 14, 2019


 பரந்து கெடுக உலகியற்றியான்.     
                   
நடைபாதை ஓரம்  அழுக்குப் படிந்த
உடையணிந்து கொண்டு முகத்திலே மீசை,
அடர்த்தியான தாடி வளர்ந்திருக்கும் கோலம்!
கிடைக்காதா இங்கே உணவென்று  குப்பைக்
கிடங்கிற்குள் தேடித் துருவித்தான் பார்க்கும்
 கடையனைக்  கண்டேனே இன்று.

கண்மணியே! கற்கண்டே! செந்தமிழே! பொன்வண்டே!
என்றெல்லாம் கொஞ்சி மகிழ்ந்திருப்பாள் தாயன்று!
வந்தவழியும் வாழ்ந்த வழியும் இவனுக்கு
என்னென்ன இன்னலைத் தந்ததோ? அய்யகோ!
தந்ததுயார்? இக்கோலம் இங்கு?

வள்ளுவர் இப்படிக் கண்டதனால்  அன்றேங்கி
உள்ளம் பதைக்க பரந்து கெடுகவே
இவ்வுலகில் இந்தநிலை தந்தவன் என்றேதான்
துள்ளிக் கடிந்தாரோ  சொல்?

இன்பத்தில் துள்ளும் ஒருவர்க்கம்! பேரலைத்
துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவர்க்கம்!
இந்த இருவர்க்க பேதங்கள் நீங்கவேண்டும்!
அந்தநிலைக் காண்ப தறிவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home