Sunday, October 18, 2020

நண்பர் அமிர்தம் பீட்டர் ராசனுக்கு வாழ்த்து

 நீர் உயிரின் வேர்!


நூலாசிரியர்:


அமிர்தம் பீட்டர் ராசன் அவர்களுக்கு வாழ்த்து!


தண்ணீரின் பண்பும் பயனுமென்ற உட்தலைப்பில்

பன்முக ஆற்றலுடன் பல்வேறு கோணத்தில்

தண்ணிரின் தன்மைகளை அக்குவேறாய் ஆணிவேறாய்

கண்முன்னே தந்தவரை வாழ்த்து.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கென்றார் வள்ளுவர்!

ஆரம்பம் இக்குறளில்! நீர்ப்பயணம் மேற்கொண்டு

வேரோடச் செய்துள்ளார் நன்கு.


வேதியியல் கற்றதால் தண்ணீரின் பண்புகளை

ஈடிணை யற்ற அணுகுமுறை கொண்டேதான்

சூடினார் வெற்றிமாலை என்றேதான்வாழ்த்துகிறேன்!

மேதினியைக் காக்கவந்த  நூல்.


தண்ணீரில் உள்ள குறைபாடு என்னென்ன

அந்தக் குறைபாடு தோற்றுவிக்கும் நோய்களென்ன

என்றே விரிவாய் எடுத்துரைத்த ஆற்றலை

வண்டமிழால் வாழ்த்துகிறேன் இங்கு.


காடுகளை எல்லாம் அழிப்பதால் தீமைகள்

கூடுகட்டும் என்றேதான் எச்சரிக்கும் தாயுணர்வை

நாடுகள் போற்றினால் இவ்வுலக மக்களிங்கே

வீடுகளில் நிம்மதியாய் வாழலாம் இல்லையெனில்

தேடி அலைந்திருப்போம் நீர்நிலையைத் தேடித்தான்!

மேதினியைக் காப்பதற்குக் கூடு.


அறிவியல் ஆளுமை பீட்டரை வாழ்த்து!

படித்துணர்ந்து நாளும் விழிப்புணர்வு கொள்ள

இடித்துரைக்கும் நூலைப் படைத்தவர் வாழ்க!

பொறியாளர் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home