Friday, January 08, 2021

68 வினைசெயல்வகை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

68 வினைசெயல்வகை

குறள் 671:

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.


செயல்களைச் செய்யத் துணிந்தபின் கால

விரயத்தில் ஈடுபட்டால் தீது.

குறள் 672:

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.


காலத்தைத் தாழ்த்தாமல் செய்வதைத்  தாழ்த்தாமல்,

தாழ்த்துவதைத் தாழ்த்தியும் செய்.

குறள் 673:

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.


இயன்றால் செயல்செய்! இயலவில்லை என்றால்

முயற்சியைச் சிந்தித்துச் செய்.

குறள் 674:

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.


செயலோ பகையோ அரைகுறையாய் விட்டால்

நெருப்பை அணைக்காமல் விட்டதுபோல்  இங்கே

பெருங்கேடு தன்னைத் தரும்.

குறள் 675:

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.


பொருள்கள் கருவியுடன் காலம் செயலும்

இடத்துடன்  ஐந்தும் செயல்செய்யத் தேவை!

நடைபோட வைக்கும் நிமிர்ந்து.

குறள் 676:

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.


செயலை,தடையை, முடிவின் பயனைக்

கணித்தே செயல்களைச் செய்.

குறள் 677:

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளங் கொளல்.


அனுபவம் உள்ளவரைத் தேர்ந்தெடுத்துப் பேசி

செயலில் இறங்குதல் நன்று.

குறள் 678:

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.


ஒருசெயலில் உள்ளபோதே மற்றொன்றைச் செய்தல்

ஒருயானை வைத்தேதான் மற்றொன்றை  இங்கே

பிடிப்பது போலாம் உணர்.

குறள் 679:

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.


நண்பருக்கு நல்லது செய்வதைக் காட்டிலும்

வன்பகையை நட்பாக்கல் நன்று.

குறள் 680:

உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.


உடனிருப்போர் அஞ்சும் பகைவந்தால் நாமும்

அடங்கிப் பணிதல் அறிவு.



































0 Comments:

Post a Comment

<< Home