Wednesday, January 06, 2021

64 அமைச்சு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

64 அமைச்சு

குறள் 631:

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட தமைச்சு.


செய்பொருள்கள், ஏற்றகாலம், செய்கின்ற செய்முறை,

செய்யும் செயல்கள் எண்ணிச்  செயல்படும்  

வல்லமை கொண்ட தமைச்சு.

குறள் 632:

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு


அஞ்சாமை, நற்குடி, மக்களைக் காப்பது,

கற்றறிதல், நன்முயற்சி அய்ந்தும் உடையதே

வெற்றிக் குரிய அமைச்சு.

குறள் 633:

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.


பகைத்துணை தன்னைப் பிரித்தலும், நல்லார்

உறவினைக் காத்தலும், உள்ளம் திருந்தி

திரும்புவோரை ஏற்ப தமைச்சு.

குறள் 634:

தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்ல தமைச்சு.


ஆய்ந்து தெளிதல், தெளிந்ததைச்  செய்வதும்

காய்தல் உவத்தலின்றி தன்கருத்தைச் சொல்லுதலும்

நல்ல அமைச்சர்க் கழகு.

குறள் 635:

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.


அறநெறி, சொல்லாற்றல், செய்யும் திறமை

நிறைந்தவரே தேர்ந்த துணை.

குறள் 636:

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்

யாவுள முன்னிற் பவை.


நுண்ணறிவும் நூலறிவும் கொண்டவரின் ஆற்றல்முன்

வஞ்சகமும் சூழ்ச்சியும் தூசு.

குறள் 637:

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்

தியற்கை அறிந்து செயல்.


நூலறிவைப் பெற்றும் இயற்கை அறிவாலே

நாட்டை வழிநடத்தல் நன்று.

குறள் 638:

அறிகொன் றறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.


தன்னால் அறியமாட்டார் சொன்னாலும் கேட்கமாட்டார்

அஞ்சாமல் சொல்லித் திருத்து.

குறள் 639:

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.


பகைவர் எழுபது கோடிக் கிணையாம்

தவறான ஓரமைச்சர் இங்கு.

குறள் 640:

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்

திறப்பா டிலாஅ தவர்.


முறையாய் அறிந்தும் செயல்திறன் அற்றோர்

அறைகுறையாய்ச் செய்வார் உணர்.




























0 Comments:

Post a Comment

<< Home