Saturday, January 09, 2021

71 குறிப்பறிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

71


குறிப்பறிதல்

குறள் 701:

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.


சொல்லாமல் இங்கே முகக்குறிப்பைச் சொல்பவர்

இவ்வுலகம் மெச்சும் நகை.

குறள் 702:

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்.


துல்லியமாய் உள்ளம் நினைப்பதைச் சொல்பவர்

தெய்வத்திற் கொப்பாவார் கூறு.

குறள் 703:

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்துங் கொளல்.


முகக்குறிப்பை வைத்தே அகக்குறிப்பைச் சொல்வோர்

திறனறிந்து தக்கவைத்தல் நன்று.

குறள் 704:

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு.


குறிப்பறிவோர் மற்றும் அறியாதோர்  என்றால்

அறிவால்தான் என்போம்! உறுப்புகளால் அல்ல!

அறிவே மனிதன் திறன்.

குறள் 705:

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்.


குறிப்பறிந்து சொல்லாதோன் கொண்டிருக்கும் கண்கள்

உறுப்பன்றி என்னபயன் கூறு?

குறள் 706:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.


கண்ணாடி உள்ளதைக் காட்டுதல்போல் உள்ளத்தில்

உள்ளதைக் காட்டும் முகம்.

குறள் 707:

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.


வெறுப்பு விருப்பை முகம்போல காட்டும்

அறிவுமிக்க தொன்றில்லை வேறு.

குறள் 708:

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின்.


அகத்தில் உள்ள குறிப்பறி வோரோ

முகம்நோக்கி நின்றால்போ தும்.

குறள் 709:

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்.


குறிப்பறியும் விற்பன்னர்  பகையா? உறவா?

குறிப்பறிவார் கண்களைப் பார்த்து.

குறள் 710:

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்

கண்ணல்ல தில்லை பிற.


நுண்ணறி வாளருக்கோ  உள்ளத்தை நன்களக்க

கண்கள் அளவுகோலாம் கூறு.





































0 Comments:

Post a Comment

<< Home