Tuesday, January 12, 2021

78 படைச் செருக்கு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

78 படைச்செருக்கு

குறள் 771:

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்னின்று கல்நின் றவர்.


என்மன்னர் முன்வந்தே போர்செய்தல் நல்லதல்ல!

வந்தால் நடுகல்தான் சொல்.

குறள் 772:

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.


முயலொன்றை வீழ்த்துவதைக் காட்டிலும் யானை

தவறிய வேலிங்கே மேல்.

குறள் 773:

பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.


பகைவருக் கஞ்சாமை ஆண்மை! அந்தப் 

பகைவர் துயர்தீர்த்தல் பேராண்மை என்பர்!

பகைவரையும் காத்தலே பண்பு.

குறள் 774:

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.


கைவேலை யானைமேல் வீசிவிட்டே தன்னுடலில் 

தைத்தவேல் பார்த்தான் நகைத்து.

குறள் 775:

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்

ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.


பகைவரின் வேல்வரும் நேரம், இமைத்தால்

புறமுதுகிட் டோடியதற் கொப்பு.

குறள் 776:

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்குந்தன் நாளை எடுத்து.


போரில் விழுப்புண்கள் அற்றநாளை எண்ணி

வீரனோ வீணென்பான் சாற்று.

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.


புகழ்நிலைக்க எண்ணி உயிர்விடும் வீரர்

கழலணிதல் என்றும் அழகு.

குறள் 778:

உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினுஞ்சீர் குன்றல் இலர்.


போர்க்களத்திற் கஞ்சாதோன்  வேந்தன் சினந்தாலும்

வீரமாய் முன்செல்வான் சொல்.

குறள் 779:

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே

பிழைத்த தொறுக்கிற் பவர்.


சூளுரைத்த வண்ணமே போர்க்களத்தில் மாய்ந்தோரை

யாரும் இழித்துரைப்பா ரோ?

குறள் 780:


புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா

டிரந்துகோட் டக்க துடைத்து.


காத்தவன் கண்கலங்க போர்க்களச் சாவினை

கேட்டுப் பெறுதல் புகழ்.


மதுரை பாபாராஜ்





























0 Comments:

Post a Comment

<< Home