Thursday, September 16, 2021

அணிலாடு முன்றிலார்


குறுந்தொகை 41

தலைப்பு தனிமையின் வெறுமை!

பாடியவர்: அணிலாடு முன்றிலார்

பாடல்

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற

அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்

மக்கள் போகிய அணிலாடு முன்றிற்

புலம்பில் போலப் புல்லென்று

அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.

-----------------------------------------------------------------------------------------

தோழி! அவரெந்தன் பக்கத்தில் உள்ளவரை

சேயிழைநான் கானகத்தின் அண்மையில்  உள்ளஇந்த

ஊரினை கோயில் திருவிழா காணுகின்ற

ஊராக எண்ணி மகிழ்ந்திருந்தேன்! நானிங்கே!

பாரேன்! தலைவர் பிரிந்தேதான் சென்றுவிட்டார்!

ஊர்விழா இங்கே முடிந்ததும்

மக்களெல்லாம்

ஊர்நீங்கிச் சென்றபின்பு முற்றத்தில் அங்குமிங்கும்

கால்பதித் தோடும்  அணில்கள்தான்! அப்படி

ஊரே வெறுமை அடைந்த

தனிவீடாய்

ஆனதென்றே வேதனையில் வாடித் தவிக்கின்றேன்!

தேனும் கசக்கும் எனக்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home